கொல்கத்தா: நேற்றைய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த பெருமையுடன் மொத்தம் 5 சாதனைகளை படைத்தார் இந்திய வீரர் ரோஹித் சர்மா.கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 173 பந்துகளில் 264 ஓட்டங்களை விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டம் குவித்தவர் என்ற உலக சாதனை படைத்தார்.
ஒரு நாள் போட்டியில் இரண்டு முறை இரட்டைச்சதம் அடித்தவர் என்ற சாதனையையும் எட்டினார். இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு பெங்களூருவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித் இரட்டை சதமடித்திருந்தார்.
அதேபோல் ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரிகள் ( மொத்தம் 33 பவுண்டரிகள்) அடித்த வீரர் என்ற சிறப்பும் ரோஹித் வசம் ஆனது. இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கரும், ஷேவாக்கும் தங்களது இரட்டை சதத்தின் போது தலா 25 பவுண்டரிகள் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.
பவுண்டரிகள் மூலமாக அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையையும் ரோஹித் நிகழ்த்தினார். அதாவது பவுண்டரிகள் மூலம் 186 ஓட்டங்களைக் குவித்தார் ரோஹித்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றார் ரோஹித் சர்மா. 2013 ஆம் ஆண்டு தென்னாப்பிரிவுக்கான எதிரான போட்டியில் இந்தியாவின் ஷிகார் தவான் 248 ஓட்டங்களைக் குவித்ததுதான் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment