இஸ்ரேலில் தொடரும் பலஸ்தீனர்களின் கலவரங்கள்

israel gazaடெல் அவிவ்: இஸ்ரேல் வாழ் பலஸ்தீனர்கள் திடீர் திடீரென தாக்குதல்களை நடத்துவதும் அவர்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை சுட்டுக் கொல்வதும் அந்நாட்டில் புரட்சி வெடிக்கும் நிலைமையை உருவாக்கி உள்ளது. இஸ்ரேல் நாட்டில் யூதர்கள் அல்லாத அரேபியர்கள் அல்லது பலஸ்தீனர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். வடக்குப் பகுதியில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக ஜெருசலமில் உள்ள வரலாற்று பழமை வாய்ந்த அல் அக்ஷா பள்ளிவாயலில் யூதர்களுக்கு வழிபாட்டு உரிமை உண்டு என்பதை அந்நாட்டு பழமைவாத அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பலஸ்தீனர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக யூதர்களை குறித்து வைத்து பலஸ்தீன இளைஞர்கள் திடீர் தாக்குதலை நடத்துவதாகவும் அதனால் அந்த இளைஞர்கள் மீது பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.கடந்த வெள்ளிக்கிழமையன்று பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இருந்து இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக குடியேறி வேலை பார்த்து வந்த இளைஞர் ஒருவர், யூதர்களின் கிராமம் ஒன்றுக்கு தீ வைத்துள்ளார். அந்த இளைஞனை பாதுகாப்புப் படையினர் தாக்கியதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை காலையில் இஸ்ரேல் அரசு அதிகாரிகளை கத்தியால் தாக்கியதாக ஒரு பலஸ்தீன இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.மீண்டும் நேற்று டெல் அவிவ் ரயில் நிலையம் ஒன்றில் பாதுகாப்புப் படை வீரரை பலஸ்தீன இளைஞர் கத்தியால் குத்தியிருக்கிறார். மேலும் யூதர்கள் குடியேற்றம் செய்யப்பட்ட மேற்குக் கரை அருகே உள்ள ஒரு இடத்தில் 25 வயது யூதப் பெண் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. அத்துடன் இஸ்ரேல் வாழ் அரேபிய சமூகத்தினர் தங்கள் மீதான குற்றச்சட்டுகளை மறுப்பதுடன் நீதி கேட்டு குரல் கொடுக்கவும் தொடங்கியுள்ளனர்.இதனால் இண்டிஃபடா எனும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள் இஸ்ரேலில் அரேபிய சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Published by

Leave a comment