ரிதிதென்ன: மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன எல்லை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ரிதிதென்ன புகையிரத தரிப்பிடம் பொது மக்களுக்கு சேவை வழங்காமல் கவனிப்பாரற்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பொளன்னறுவை மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் மட்டக்களப்பு – கொழும்பு ரிதிதென்ன பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள இப் புகையிரத தரிப்பிடம் இலங்கை போக்குவரத்து அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை புகையிரத திணைக்களத்தின் ஒரு புகையிரத தரிப்பிடமாகும்.
குறித்த புகையிரத தரிப்பிடம் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அனர்த்த முகாமைத்துவ சேவைகள் அமைச்சரும், இன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.அமீர் அலியின் வேண்டுகோளுக்கினங்க மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு 2008ஆம் ஆண்டு பங்குனி மாதம் 4ஆம் திகதி அப்போதைய போக்குவரத்து அமைச்சரும், தற்போதய இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சருமான டளஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதியின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதய பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ ஆகியோரினால் மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டு சிறிது காலம் பொது மக்களுக்கு சேவை வழங்கிய இப் புகையிரத தரிப்பிடம் அன்று தொடக்கம் இன்றுவரை கவனிப்பாரற்று கிடப்பதாகவும் ,மக்களுக்கு சேவை வழங்காமல் பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு தங்குமிடமாகவும் அவற்றின் எச்சங்களுக்கும் சேவை வழங்கும் ஒரு இடமாகவும் இப்புகையிரததரிப்பிடம் மாறியுள்ளதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த புகையிரத தரிப்பிடத்தில் பயணச்சீற்று வழங்கக்கூடிய வசதி உட்பட ஏனைய வசிதிகள் இருந்தும் மக்களுக்கு சேவை வழங்க முடியாமல் பறவைகள் மற்றும் கால்நடைகளின் எச்சங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இத் தரிப்பிடத்தை பிரயாணிகளுக்கு சேவை வழங்கும் இடமாகவும், பிரயாண பயணச்சீற்றை வழங்கும் ஒரு இடமாகவும் மாற்றித்தருமாறு போக்குவரத்து அமைச்சர் , புகையிரத திணைக்களத்தின் பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பொது மக்கள் வேண்டிக்கொள்கின்றனர்.
தற்போது குறித்த ரிதிதென்னை புகையிரத தரிப்பிடத்திலிருந்து பிரயாணிகள் வேறு இடங்களுக்கு பயணம் செய்வதாக இருந்தால் புணானை அல்லது வெலிகந்தை புகையிர நிலையத்திற்கு சென்று பயணச்சீற்றை பெற வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment