தர்ஹாநகர் பதற்றம்: முஸ்லிம் பெண் ஒருவர் காயம்!

dharkatown dharhaஅளுத்கம: தர்கா நகர் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் அயலிலுள்ள பதிராஜகொட ஊரில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியொன்றில் கலந்து கொண்டு வெற்றியீட்டி உள்ளனர். அவர்கள் திரும்பி வரும் வழியில் சிங்கள நபரொருவர் பதிராஜகொட விகாரை அருகில் பாதையை மறித்து தனது சைக்கிளை நிறுத்தி வம்புக்கு இழுத்துள்ளார். கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து இந்தச் சம்பவம் சிங்கள- முஸ்லிம் இளைஞர்களின் மோதலாக உருவெடுத்துள்ளது. இதன்போது அவ்வழியால் சென்ற, இந்த மோதலுடன் சம்பந்தமே இல்லாத திருமதி தௌபீக் என்ற பெண்மணி கடுமையான தாக்குதலுக்குள்ளாகி,  தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் போது விகாரையின் மணி தொடர்ச்சியாக ஒலிக்கப்பட்டு சிங்களவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக முஸ்லிம் இளைஞர்கள் தமது வாகனங்களில் ஏறி, காயங்களுடன் தப்பியோடியுள்ளனர். எனினும் ஒரு பல்சர் ரக இருசக்கர வண்டி மட்டும் சிங்களவர்களின் கையில் சிக்கியுள்ளது.

இச்சம்பவத்தின் பின்னர் தர்காநகருக்குள் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் காயமடைந்த பெண்ணின் இரண்டு மகன்களான இம்ரான், இன்சாப் ஆகிய இரண்டு பேர் மற்றும் அங்கிருந்த மற்றுமொரு நபர், அயல் வீட்டிலிருந்து மூன்று பேர் என கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் இவர்களுக்கு சம்பவத்துடன் எதுவித சம்பந்தமும் இல்லையென்று தெரிய வருகின்றது.

மேலும் கலவரம் நடந்த இடத்தில் பல்சர் வண்டியை விட்டுவந்த இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமதி தௌபீக்கை அவரது குடும்பத்தவர் பார்வையிடவும் பொலிசார் அனுமதி மறுத்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக தர்கா நகரில் மீண்டும் கடும் பதற்ற சூழல் தோன்றியுள்ளது. ஆங்காங்கே பொலிசார் குவிக்கப்பட்டு அச்ச உணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by

Leave a comment