காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் காணப்படும் பாரிய பிரச்சினையாக காணப்பட்ட குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கான காலம் கணிந்துள்ளதாக தவிசாளர் எஸ் எச் எம் அஸ்பர் தெரிவித்தார். நேற்று 28.10.2014 காத்தான்குடி நகர சபையில் இடம்பெற்ற பிரதேச ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் இந்த நகர சபையை பொறுப்பேற்றபோது குப்பை, மடுவம் ,வடிகான் ,குடிநீர்வசதி மற்றும் மலக்கழிவு ஆகிய ஐந்து முக்கிய பிரச்சினைகள் காணப்பட்டன. இதில் மடுவம் வடிகான் குடிநீர் போன்றவை பெரும்பாலும் தீர்க்கப்பட்டபோதிலும் குப்பை பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்பட்டது. ஒரு நாளைக்கு காத்தான்குடி பகுதியிலிருந்து 50,000 கிலோ குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன
இதற்காக எமது பிரதேசத்தில் நிலப்பற்றாக்குறை காரணமாக பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ஐம்இய்யத்துல் உலமாசபை சமூக அமைப்புக்கள் விளையாட்டுக்கழகங்கள் மற்றும் தனவந்தர்களின் உதவியுடன் பல எதிர்ப்புக்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் காணிகொள்வனவு செய்யப்பட்டு, பிலிசறு திட்டத்தின் கீழ் சூழல் சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியுடன் கொம்போஸ் செய்வதற்கான பூர்வாங்க வேலைகள் கடற்கரைப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன. இது எமது சுயநலத்திற்காக செய்யவில்லை எதிர்கால சந்ததிக்காகவே செய்துள்ளோம்.
குப்பைகளைப் பொறுத்தவரையில் உக்குகின்ற மற்றும் உக்காத குப்பைகள் என இரு வகைப்படுத்தலாம். உக்குகின்ற குப்பைகளைகொண்டு உரம் தயாரிக்கப்பட்டபோதிலும் உக்காத குப்பைகளைக்கொண்டு ஆற்றினை நிறப்பி அதன்மேல் கிறவல் இட்டு மூடிவிடுவதற்கான வேலைத்திட்டங்கள் செய்துகொண்டிருந்தோம். இதனை பொறுக்காத காழ்ப்புணர்வுகொண்ட அப்பகுதியில் வசிக்கும் ஒரு சிலர் எனக்கொதிராக வழக்குத்தாக்கல் செய்து ஆற்றங்கரைப்பகுதியில் குப்பை கொட்ட கூடாது என தடை விதித்துள்ளனர். எதிர்வரும் 11ம் திகதிவரை மாத்திரமே அப்பகுதியில் குப்பைகளைக்கொட்ட நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்பின்னர் சேரும் குப்பைகளை எடுக்காவிட்டால் வரும் மாரி காலத்தில் டெங்கு போன்ற தொற்று நோய்கள் இடம்பெற வாய்ப்புள்ளதால் இதனை கவனத்தில் எடுத்து காத்தான்குடியை ஆறு வலயங்களாக பிரித்து யுனெப்ஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் வரும் வாரத்திலிருந்து திங்கள் செவ்வாய் வியாழன் சனி ஆகிய தினங்களில் உக்குகின்ற குப்பைகளையும் புதன் மாத்திரம் உக்காத குப்பைகளையும் வெள்ளி ஞாயிறு தினங்களில் விடுமுறை தினமாகவும் கொள்ளப்பட்டு குப்பைகளை சேகரிக்கவுள்ளோம் இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.
குப்பைகளை தரம் பிரிக்கும்போது கட்டாயம் உக்குகின்ற அதாவது வீட்டுக்கழிவுகள் மீன் கழிவுகள் பழ வகைகளின் கழிவுகள் போன்றவையும் உக்காத கழிவுகளாக பிளாஸ்திக் கண்ணாடி சொப்பிங் பேக் போன்றவையினையும் கொள்ளலாம்.
அத்துடன் எதிர்காலத்தில் நவீன இயந்திங்களைக்கொண்டு உக்குகின்ற குப்பைகளை மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் உக்காத குப்பைகளைக்கொண்டு மீள் சுழற்சி முறையில் புதிய உற்பத்தி பொருட்கள் செய்வதற்கும் JPS தொழிநுட்பத்தினைக்கொண்டு குப்பை மெசின் எவ்வீதியால் செல்கின்றது என்பதைக்கண்டு பிடிக்கவும் பிரதேசத்திற்கு தேவையான பெரிய கொள்ளவுடன் கூடிய ட்ரக்டர் மெசின் மற்றும் அதி நவீன இயந்திரங்களை கொள்ளவனவு காத்தான்குடி பிரதேசத்தினை பசுமையான சுற்று சூழல் மிக்க அழகான ஒரு நகராக மாற்ற உத்தேசித்துள்ளோம் இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.
Published by

Leave a reply to Azhar Cancel reply