ஓட்டமாவடி: அல்- கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வியினால் இன்று அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அல்-கிம்மா நிறுவனம் இன மத வேறுபாடின்றி, சமூக ஐக்கியத்தையும் நாட்டின் அபிவிருத்தியினையும் கருத்திற்கொண்டு, இலங்கையின் பலபாகங்களிலும் பல்வேறுபட்ட சமூகப்பணிகளை செய்துவருகின்றது.
அந்தவகையில், அல் கிம்மா நிறுவனம் அமைந்துள்ள கல்குடாத் தொகுதியில் நீண்ட காலக் குறைபாடாக உள்ள குடிநீர் இணைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தி, மக்களுக்கு சுத்தமான குழாய் நீர் இணைப்பினைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே பிரதேசத்தின் அரசியல் வாதிகளினாலும் சமூக நிறுவனங்களினாலும் குடி நீர் இணைப்பு தொடர்பான வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டு, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அல்கிம்மா நிறுவனம் நேரடியாக நாட்டின் ஜனாதிபதியிடம் இது தொடர்பிலான மகஜர் ஒன்றினை சமர்ப்பித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்ட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிடுவதற்காக, (2014.10.28ம் திகதி) இன்று வருகைதந்திருந்த அதிமேதகு ஜனாதிபதியவர்களை முதலமைச்சரின் இல்லத்தில் வைத்து சந்தித்த போதே இம்மகஜர் கையளிக்கப்பட்டது.
மேலும் இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி, அவசரமாக கல்குடா வாழ் மக்களின் இப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தர தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களையும் நிறுவனத்தின் பணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment