காத்தான்குடி: காத்தான்குடியில் கலாசார மரபுரிமைகள் அமைச்சின் தேசிய நூதன சாலைத் திணைக்களத்தால் அமைக்கப்பட்டுவரும் இலங்கையின் முதலாது இஸ்லாமிய நூதனசாலையின் இறுதிக் கட்ட வேலைகளை திட்டமிட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று 27-10-2014 திங்கட்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தது.
இக் குழுவினர் மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் நான்கு மாடி நூதனசாலையின் புதிய கட்டிடத்தின் இறுதிக் கட்ட பணிகளை பார்வையிட்டதுடன் மேலதிகமாக செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் ஆராய்ந்தது.
இந்த குழுவின் விஜயத்தில் இந்த நூதனசாலையை உருவாக்க முயற்சி எடுத்த பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருதிக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ,மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,பிரதம கணக்காளர் எஸ்.நேசராசா,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நூதனசாலையில் இஸ்லாமிய பண்டைய வாழ்க்கை முறைகள் மற்றும் இஸ்லாமியர்கள் அன்று தொட்டு இன்றுவரை பயன்படுத்தும் வரலாற்று உபகரணங்கள் ,தளபாடங்களை காட்சிப்படுத்த கலாசார மரபுரிமைகள் அமைச்சு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
இந்த நூதனசாலையை நிறுவுவதற்கு கலாசார மரபுரிமைகள் அமைச்சு,நூதனசாலைகள் திணைக்களம்,தொல்பொருள் ஆராச்சி திணைக்களம்,பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்பன பங்களிப்பு செய்து வருவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.
குறித்த காத்தான்குடி இஸ்லாமிய நூதனசாலை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படவிருப்பதுடன் டிசம்பர் மாத இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிப்பகுதிக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment