– ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்
மட்டக்களப்பு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேச முதியோர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் முதியோர் உரிமைகளைப் பாதுகாத்தலும். மேம்படுத்தலும் எனும் தொனிப்பொருளிலான உயர் மட்டக் கலந்துரையாடல் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது.
எமது நாட்டிலுள்ள முதியவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள், இதனால் பல பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் முகங்கொடுக்கின்றனர். முதியோர் உரிமைகளைப் பாதுகாத்தலும், மேம்படுத்தலும் சமுகத்தின் மீதுள்ள கடற்பாடாகும் இலங்கையிலுள்ள முதியோர் நலன்களைப் பாதுகாத்து முன்னேற்றுவதுடன் அவர்களை சுதந்திரமாகவும், சுய மரியாதையுடனும், கண்னியத்துடனும் வாழச் செய்தல் வேண்டும் என அஸீஸ் கருத்துத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் வைத்தியக் கலாநிதி. கே.அருளானந்தம், ‘வயது முதிர்ச்சியும், சுகாதாரத் தேவைகளும்’ எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். முதியோர் தொடர்பான சட்டம் பற்றி சட்டத்தரணி. மிருதினி சிறிஸ்குமார் அவர்களும், சமூகப் பாதுகாப்பும், பராமரிப்பும் எனும் தலைப்பில் சமூக சேவைகள் திணைக்கள அதிகாரி திரு. செல்வநாயகம் அவர்களும், முதியோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிகள் எனும் தலைப்பில் சட்டத்தரணி. அருள்வாணி சுதர்சன் அவர்களும் கருத்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது பங்குபற்றுனர்களாக முதியோர் உரிமை மேம்பாட்டு அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள். சிறைச்சாலை புனர்வாழ்வு அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், முதியோர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட முதியோர் செயற்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டது.
Published by



Leave a comment