காத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் வைத்திய பீட மாணவர்கள் என்போருக்கான கருத்தரங்கும் கலந்துரையாடலும் காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வினை டாக்டர் சியாம் அவர்களும் ஆய்வுக்கும் அறிவுப் பகிர்வுக்குமான மையமும் ( CRAKS) ஒருங்கிணைந்து நடாத்தியது. இந்நிகழ்விற்கு டாக்டர் ஷியாம் அவர்கள் தலைமை தாங்கினார்.
இவ்வாறன ஒரு கூட்டியக்கம் பற்றி பலரும் சிந்த்தித்திருந்தாலும் இதனை நடை முறைப்படுத்துவது சிரம சாத்தியமாகவே இருந்தது. வைத்தியத் துறையினைச் சேர்ந்த டாக்டர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பொது நன்மைக்காக கூட்டியக்கத்துக்குள் கொண்டுவருவதற்கான ஒரு புதிய முயற்சியாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
இதில் படித்து முடித்து வைத்தியர்களாக கடமையாற்றும் இளம் வைத்தியர்களுடன் மருத்துவ பீடத்தில் கல்வி பயின்று கொண்டிருக்கும் மாணவர்களும் கலந்துகொண்டனர். எமது வைத்தியர்கள் வெறுமனே MBBS கற்கையுடன் நின்று விடாது விசேட துறைகளில் கற்க வேண்டியதன் அவசியத்தினையும் அதற்கான சுதேச சர்வதேச வாய்ப்புகள் பற்றியும் உரைகள் நிகழ்த்தப் பட்டு அதன் பின்னரான கலந்துரையாடலும் இடம் பெற்றது.
இந்நிகழ்வினை டாக்டர் சியாம் நெறிப்படுத்தினார் அதன் பின்னர் டாக்டர் றிபாஸ் உரை இடம்பெற்றது. அவரது உரையில் பட்டப் பின்படிப்பின் சாத்தியங்கள் அதன் அவசியப் பாடு அதற்கான சமுக தேவை, எமது மாணவர்களின் திறன் என்பனபற்றி குறிப்பிட்டதுடன் வைத்தியர்கள் தமது நிபுணத்துவ எல்லைக்குள் மாத்திரம் தம்மை குறுக்கிக் கொள்ளாது சமுக பிரக்ஞையோடு இருக்கவேண்டியதன் அவசியத்தையும், படித்தவர்கள் சமுக விடயங்களிற்கு தலைமைத்துவ பொறுப்புகளை சுமக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார் .
பின்னர் டாக்டர் ஜாபிர் அவர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு பட்டப் பின்படிப்பானது தாண்ட முடியாத பெரும் தடையல்ல என்பதனை மிக சுவைபட எடுத்துரைத்தார்.
இங்கிலாந்தில் கடமை புரியும் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் பரீத் அவர்கள் சிறிய உரைத் தொகுப்பு ஒன்றினை ஒலிச் செய்தியாக அனுப்பி இருந்தார். அதில் மிக முக்கியமான ஒரு கருத்தினை வெளியிட்டார். அதாவது பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்கு நடாத்தும் நிலையிலிருந்து தனியாக மருத்துவ பீட மாணவர்களுக்கு கருத்தரங்கு நடாத்தும் அளவிற்கு சமுகத்தின் கல்வி மேம்பட்டு இருப்பதையிட்டு தான் பூரிப்படைவதாகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
டாக்டர் சியாம் அவர்கள் பட்டப் பின்படிப்புக்கான வாய்ப்புகள் அதற்கான துறைகள் மருத்துவ பட்டப் பின்படிப்பு நிறுவகத்தில் நடாத்தப்படும் பரீட்சைகள் தொடர்பாக ஒரு கண்ணோட்டத்தை நிகழ்த்தினார். இதன் பின்னர் இதில்கழ்ந்துகொண்ட வைத்தியர்கள் வைத்திய பீட மாணவர்கள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இடம் பெற்றது.
Published by



Leave a comment