காத்தான்குடி: காத்தான்குடி 5, பதுறிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் இம்மாதம் 18, 19ம் திகதிகளில் மாநாடும், 20ம் திகதி பொதுக்கூட்டமும் இடம்பெற இருக்கின்றது. இலங்கையிலுள்ள சுன்னத் வல் ஜமாஅத் மார்க்க தலைவர்களை உள்ளடக்கி பிரமாண்டமான செலவில் ஏற்பாடு செய்யப்படும் இம்மாநாடு பத்றிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலிலேயே இடம்பெற இருக்கின்றது.
இம்மாநாட்டில், சுன்னத் வல் ஜமாஅத் என அழைக்கப்படும் கப்ர் வணக்கம், பெரியார் வழிபாடு, கத்தம், பாத்திஹா, ராத்திப்பு, சீதனம், கந்தூரி, கொடியேற்றம், சந்தனக்கூடு ஏற்றல், இசை போன்ற விடயங்களை ஆதரிக்கும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலரும் பல பிரதேசங்களில் இருந்தும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இம்மாநாட்டில், மேற்படி விடயங்களை எதிர்க்கக்கூடிய இஸ்லாமிய இயக்கத்தினரை எதிர்த்தும், இவர்களால் சுன்னத் வல் ஜமாஅத் இயக்கத்துக்கு ஏற்படும் சங்கடங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கும் தீர்வு காணும் விடயங்கள் பிரதானமாக அலசப்பட இருக்கின்றன.
1979 ம் ஆண்டு, காத்தான்குடி 5, மார்க்கட் சதுக்கத்தில் இடம்பெற்ற மீலாத் விழாவின் போது, தான் பேசிய இஸ்லாத்திற்கு முரணான அத்வைதக் கருத்துக்களால் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா முர்தத் பட்டம் வழங்கியது.
பதுறிய்யா ஜூ.பள்ளிவாயல், கா.குடி-05
இதன் பின்னர், தன்னை ஓர் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையாளனாகவும், சூபித்துவ வாதியாகவும் மாற்றிக்கொண்ட மௌலவி அப்துர் ரஊப், அத்வைதக் கொள்கையிலிருந்து தான் மீள்வதாகத் தெரிவித்தார்.
எனினும் அப்துர் ரஊப் மௌலவி, தொடர்ந்தும் அத்வைதத்தை சமகாலத்திலும் காத்தான்குடியில் போதித்து வருகின்றார் என்பதைச் சுட்டிக்காட்டி , இவருக்கு எதிராக காத்தான்குடியின் இஸ்லாமிய இயக்கங்களான தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் தாருல் அத்ர் அத்தஃவியா பகிரங்க விவாதத்திற்கு அண்மைக்காலமாக அப்துர் ரஊப் மௌலவியை அழைத்துவரும் இத்தருணத்தில், இம்மாநாடு இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டின் பின்னர் காத்தான்குடியில் மார்க்க விடயங்களில் எத்தகைய மாற்றங்கள் நிகழப்போகின்றன என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றமை ஓர் விசேட அம்சம்!
Leave a comment