மக்கா: உலகெங்கும் இருந்து புனித மக்காஹ் நகரில் சுமார் 1.3 மில்லியன் மக்கள் ஒன்றுதிரண்டுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை ஹஜ் கடமை ஆரம்பமாகிறது. துல் ஹஜ்ஜின் எட்டாம் நாளில் புனித ஆலயத்தை தரிசித்து, ஹஃபதுல்லாஹ்வை தவாபு செய்தபின்னர், இன்றிரவு (8ம் இரவு) மினாவில் மக்கள் தங்குவர். அதன் பின்னர் 9ம் தினமான நாளை வெள்ளிக்கிழமை அரபாவில் ஹாஜிகள் ஒன்றுகூடுவர்.
சவூதி அரேபிய கடவுச்சீட்டு பிரிவு வெளியிட்ட அறிவிப்பில் 1,365,106 ஹஜ் யாத்திரிகர்களுடன் இந்த ஆண்டின் ஹஜ் கடமைக்கான வருகை முடிவுக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளது. ஹஜ் கடமைக்கு விமானத்தின் மூலம் 1,293,248 பேரும், தரைவழியாக 57,876 பேரும் கடல் மார்க்கமாக 13,982 பேரும் வருகை தந்திருப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புனித ஹஜ் யாத்திரையை பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 160 நாடுகளில் இருந்து சவூதி அரேபியாவுக்கு மக்கள் வருகை தருகின்றனர்.
இஸ்லாமிய நாட்காட்டியின் கடைசி மாதமான துல்ஹஜ்ஜில் இடம்பெறும் ஹஜ் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் கடமைக்காக வெள்ளையாடை தரிக்கும் யாத்திரிகர்கள் இறைத்தூதர் இப்ராஹிம் நபி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்களை நினைவுகூர்கின்றனர்.
இம்முறை ஹஜ் கடமையில் ஒழுகீனங்களை தடுப்பதற்காக சவூதி அரேபியா பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இம்முறை வெள்ளிக்கிழமை அரபா நாள் வருவதால் ‘ஹஜ்ஜூல் அக்பர்’ எனும் பெரிய ஹஜ் நாளாக அமைகின்றமை ஓர் விசேடஅம்சமாகும்.
Published by


Leave a comment