அசின் விராது தேரர் இலங்கை விஜயத்திற்கு விசா வழங்கப்பட்டமைக்கு சட்டத்தரணி ஹரீஸ் எம்.பி. கண்டனம்

Harees MPss– ஹாசிப் யாஸீன்

கொழும்பு: மியன்மாரின் 969 இயக்கத்தின் தலைவரான அசின் விராது தேரர் இலங்கை விஜயத்திற்கு விசா வழங்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

அசின் விராது தேரர் இன்று அதிகாலை இலங்கை வந்து சுகததாச உள்ளக அரங்கில் நாளை இடம்பெறவுள்ள பொதுபல சேனாவின் விஷேட கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணியில் இந்த தேரர் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் எமது நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை முஸ்லிம்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேரருக்கு விசா வழங்கியதை முஸ்லிம் சமூகம் சந்தேக கண்கொண்டு பார்க்கின்றனர்.

சமயத் தலைவர்கள் நாட்டுக்கு வருவதில் எவ்வித பிரச்சினையுமில்லை. இருந்த போதிலும் சர்ச்சைக்குரிய அசின் விராது தேரரின் விஜயத்திற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு வெளியிடுகின்றனர்.

மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டில் இவர் பின்னணியாக இருந்து செயற்பட்ட விடயம் முழு உலகமுமே அறிந்ததொன்றாகும். இவ்வாறான நிலையில் இவருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் உயர் பதவிகளிலுள்ள அதிகாரிகள் வரலாற்றுத் தவறைச் செய்துள்ளனர்.

Harees MPss
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் MP.

எந்த பரீசிலனையும் மேற்கொள்ளாமல் எடுத்த தீர்மானம் இன்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அளுத்கம சம்பவத்திற்கு பின்னர் சமூகங்களுக்கிடையில் சகவாழ்வினை வளர்க்கும் செயற்திட்டம் நாட்டின் பல பாகங்களில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் விராது தேரரின் இவ்விஜயம் முஸ்லிம்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் மியன்மாரைப் போன்று இலங்கையையும் அடித்தளமிடும் கூட்டாக உள்ளது என்ற சந்தேகம் எம்மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சமூக ஒற்றுமை தொடர்பில் பேசும் அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தினை மிகவும் பொறுப்புணர்வுடன் ஆராய வேண்டும். இவரின் இவ்விஜயத்தினை அரசாங்கம் கண்டுகொள்ளாமை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கவலையினை ஏற்படுத்துள்ளது. அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த விடயம் சம்பந்தமாக மிக அவசரமாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றார்.

Published by

Leave a comment