மாவனல்லை: 24-09-2014 புதன்கிழமை மாவனல்லை பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 கடைகள் சேதமடைந்திருக்கின்றன. இவற்றுள் சுமார் 10 கடைகள் முற்றாக அழிந்திருக்கின்றன.
தீ பரவ ஆரம்பித்த நேரத்தில் தீயைக் கட்டுப்படுத்த கடை உரிமையாளர்களும் சில பொதுமக்களும் அதிகப்பிரயத்தனம் எடுத்துவந்தபோதிலும், அதிகமானவர்கள் தங்களது ‘ஸ்மார்ட் ஃபோன்’களில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுக்கும் ஓர் பரிதாப நிலையினையே மாவனல்லை நகரில் காணமுடிந்தது.
மாவனல்லை நகர தீயணைப்புப் படையினர் வந்துவிட்டனர். இனிமேல் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற மனப்பாங்கில் பலர், தங்களது முயற்சிகளைக் கைவிட்டு பின்னவாங்கினர்.
இவ்வாறான ஸ்மார்ட் ஃபோன்களின் வருகைகளின் பின்னர், ஆபத்துக்களிலிருந்து உயிர்களையும், உடமைகளையும் காப்பாத்துவதைவிட, சம்பவங்களை போட்டி போட்டு படம் பிடிப்பதிலும், வீடியோ எடுப்பதிலுமே தற்போதுள்ள இளைஞர்கள் ஈடுபடுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தீ பரவிவரும்போது, இங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் முயற்சித்திருந்தால், தீயை தொடர்ந்தும் பரவாமல் கட்டுப்படுத்தி இருக்கலாம்.
புத்தக நிலையம், பிளாஸ்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என சுமார் 20 கடைகள் இந்த தீயால் தற்பொழுது பாதிக்கப்பட்டிருப்பதாக மாவனல்லைப் பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.
இன்றைய சம்பவத்தில், பொதுமக்களில் சிலர் தீயைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்தனர். எனினும் அதிகமானவர்கள் வேடிக்கை பார்ப்பதுபோல் தங்களது ஃபோன்களில் லயித்திருந்ததையும் காணக முடிந்தது.
“ரோம் நகரம் எரிந்துகொண்டிருக்கையில் ‘பிடில்’ வாசித்த நீரோ மண்ணனின் நிலையிலேயே அதிகமான எமது இளைஞர்கள் காணப்பட்டது தமக்கு வருத்தம் அளிப்பதாக” பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
Published by



Leave a comment