மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை, அம்பலத்தடி சந்தியில் இன்றுகாலை இடம் பெற்ற விபத்து சம்பவமொன்றில் எண்பத்தொரு வயதுடைய சின்னத் தம்பி சோமசேகரம் என்ற வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மூங்கிலடி வீதி, வந்தாறுமூலையை சேர்ந்த மேற்படி நபர் இன்று காலை தனது துவிச்சக்கரவண்டியை திருத்திக்கொண்டு பிரதான வீதி வழியாக வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் இவீதியை கடந்து செல்வதற்காக பிரதான வீதியில் போடப்பட்டுள்ள மஞ்சள் கடவையில் தனது துவிச்சக்கரவண்டியை தள்ளிக்கொண்டு செல்லும்போது வாழைச்சேனைப் பக்கமாகவிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வயோதிபர் மீது மோதியதால் அவ்விடத்திலேயே அவர் மரணமாகியுள்ளார்.
தொப்பிகல, நரகமுல்ல எனும் இராணுவ முகாமில் கடமைபுரியும் இராணுவ வீரர்கள் விடுமுறையில் செல்லவிருக்கும் ஒரு வீரரை மோட்டார் சைக்கிளில் சிவில் உடையில் ஏற்றி வரும்போதே இவ்விபத்து இடம் பெற்றதாக நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர்.
இராணுவ வீரர் காயமுற்று செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் மரணமடைந்த சின்னத் தம்பி சோமசேகரம் என்பவர் செங்கலடி பிரதேச கிராம சேவை உத்தியோகத்தரான சோமசுந்தரம் கனகரத்தினம் என்பவரின் தந்தை ஆவார்.
மாவடிவேம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இவரது சடலத்தை ஏறாவூர் பொலிசாருடன் பார்வையிடச் சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்கள் இவிசாரணைகளின் பின்னர் பிரேதப்பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிசாரைப் பணித்தார்.
தற்போது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Published by




Leave a comment