காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வாவிகளில் பிடிக்கப்படும் மீன்களை உட்கொள்ளக்கூடாது என வதந்தி பரவி வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வதந்தியை நம்பவேண்டாம் எனவும் கூறி காத்தான்குடி பிரதேச மீனவர்கள் 22-09-2014 இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மீனவர் சங்கங்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இவ் ஆர்ப்பாட்டம் காத்தான்குடி அல் அக்ஸா மீனவர் சங்கக் கட்டிடத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
பொய்யான தகவல்களை நம்பாதீர்கள் மீனவனின் வயிற்றில் அடியாதீர்கள், ஏற்பட்ட வதந்தியின் காரணத்தால் மீனவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, கூலர் மீன்கள் வந்து நமது ஊரில் விற்பனை செய்வதால் மட்டக்களப்பு வாவி மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர், உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு தமிழ் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டதில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மீனவர் சங்கங்களின உறுப்பினர்கள் உட்பட மீனவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் விடயம் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.ரி.டொமின்கோ ஜோர்ஜிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது வாவிகளில் உள்ள மீன்களை உட்கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்படுவது வதந்தியேயாகும். இதை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்பதுடன், மீன்களுக்கு எந்தவித நோயுமில்லை எனவும் அவ்வாறு மீன்களை உட்கொள்ளக்கூடாது என்றால் நாங்கள் பொது மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தல் விடுப்போம் எனவும் இவ்வாறான வதந்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாமெனவும் தெரிவித்தார்.
Published by

Leave a comment