உலக அமைதி தினம் – செப்டெம்பர் 21

azees– அப்துல் அஸீஸ், மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி

உலக அமைதி தினம் என்றால் என்ன என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதற்குக் காரணம் அமைதி என்பதன் அர்த்தம் சிலருக்குப் புரியாமல் இருப்பதாகும். உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளுக்கிடையே மோதல் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் விதத்திலும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1981ம் ஆண்டு முதன் முதலாக உலக அமைதி தினம் கொண்டு வரப்பட்டது. செப்டம்பர் 21ம் திகதி உலக அமைதி தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஒரு குடும்பத்தில் அமைதி ஏற்படுமாகவிருந்தால் அக்குடும்பத்தில் அனைத்து விடயங்களும் சிறக்கும். ஒரு ஊரில் அமைதி இருக்குமேயானால் அவ் ஊர் மக்கள்
பரஸ்பர புரிந்துணர்வுடனும், சகிப்புத் தன்மையுடனும் சகல விடயங்களையும் முன்னெடுத்துச் செல்வர். இதே போன்று ஒரு நாட்டில் அமைதி ஏற்படுமாகவிருந்தால் அந்நாடே அபிவிருத்தி அடையும் என்பதை அனைவர்களும் மனதிற் கொள்ள வேண்டும். எனவே அமைதி எங்கிருக்கின்றதோ அங்கு மகிழ்ச்சியும் கூடவே இருக்கும். எது எவ்வாறிருப்பினும் உலக முன்னேற்றத்திற்கு அடிப்படையானது சமாதானம் ஆகும்.

இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்ற போது ஏறத்தாள ஆறு கோடிப் பேருக்கு மேல் உயிரிழந்தனர். இவர்களில் பல்வேறு சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்த தொன்னூறு இலட்சம் பேர் வேண்டுமென்றே அழித்து ஒழிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு கெல்லப்பட்டவர்கள். இந்தப் போரின் பேரழிவுக்குப் பிறகுதான் எல்லா மனித உயிர்களின் பெருமதியை வலியுறுத்துவதற்காகவும,உலக அமைதியையும், சமாதானத்தையும் குறிக்கோளாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் தாபனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

உலகில் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பணியைச் செய்வதற்காக யுனெஸ்கோ நிறுவனத்திடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் பணி கல்வி, அறிவியல், பண்பாட்டு நடவடிக்கைகளின் வழியாக உலக சமாதானம், மனித இனத்தின் பொதுநலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே.

மனித உரிமைகள் யாவருக்கும் உரியவை. வெவ்வேறு நாடுகளி;ல் மனிதர்கள் நடத்தப்படும் முறை வெவ்வேறாக இருந்தாலும் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் இன்று உலகிலிருக்கும் எல்லா மனிதர்களுக்கும் இது பொதுவானது. மனித உரிமைகளை அனுபவிக்க வேண்டுமானால் அங்கு சமாதானம் இருக்க வேண்டும். போர், பயங்கரவாதம், வன்முறையைத் தடுப்பதில் முதற்படி, நாம் எவருக்கு எதிராகச் செயல்படுகின்றோம் என்பதை அறிதல் வேண்டும். ஒற்றுமையுடன் அனைவர்களும் வாழும் போதுதான் அமைதியைக் காண முடியும்.

சுவீடன் நாட்டு தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான அல்பிரட் நோபல் ஏற்படுத்திய ஐந்து நோபல் பரிசுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் ஒன்று. நோபல் என்பவர் ஒரு வேதிப் பொறியியல் நிபுணர் ஆவார். அவர் கண்டு பிடித்த பொருட்கள் பல. டைனமைட், வெடிகுண்டுகள். போர்த்தளவாடவெடி மருந்துகள் போன்றவை. அவரின் கண்டு பிடிப்புக்களில் சில மரணம் அல்லது பேரழிவைத் தரக்கூடியவை. இவர் இவ்வாறான பல பொருட்களை கண்டு பிடித்ததினால் அவர் சமாதானத்திற்கான ஒரு கொடையை விட்டுச் செல்ல வேண்டும் என்று விரும்பியதாக நம்பப்படுகிறது.

நோபலின் உயிலின்படி, ‘சமாதானப் பரிசு தேசங்களின் சகோதரத்துவத்திற்கு, நிலப்படைகளின் குறைப்பு அல்லது ஒழிப்புக்கு, சமாதானக் கூட்டமைப்புக்களைக் கூட்டவோ மேம்படு;த்தவோ பாடுபடுவதற்கு மிகப்பெரிய அல்லது சிறந்த பணியைச் செய்தவருக்கு அளிக்க வேண்டும் எனவும், நோhவேயின் பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கும் ஐந்து பேர் கொண்ட குழுவினால் இப்பரிசு வழங்கப்பட வேண்டும்’ என்றும் நோபலின் உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சமாதான் பரிசு ஒவ்வொரு ஆண்டும் ஒஸ்லோவில் நோர்வே அரசரின் முன்னால் நோபல் இறந்த தினமாகிய டிசம்பர் 10ம் நாளன்று வழங்கப்படுகிறது.

Published by

Leave a comment