லாஹூர்: உடல் தகுதி சோதனையின்போது நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலை பூர்த்தி செய்யாத வீரர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் வெட்டப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் சபை தலைவர் முகமது அக்ரம் கூறியதாவது:
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒப்பந்தம் செய்துள்ள வீரர்களில் பெரும்பாலானோர் லாகூரில் இந்த வாரம் உடல் தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கடந்த ஜூன் மற்றும் ஜூலையில் இதுபோன்ற முகாம் நடத்தி உடல் தகுதியை சோதித்தோம். அப்போது மீண்டும் சோதனை நடத்தப்படும் என்றும் வீரர்களிடம் தெரிவித்திருந்தோம். இந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் 17 வகையான படி நிலைகள், அளவுகோல்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை வீரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும்.
கடந்த முகாமில் அளிக்கப்பட்ட அறிவுரைகளை ஏற்று சரியாக உடலை பராமரித்து கட்டுக்கோப்பாக வைத்துள்ளனரா என்பது தற்போதைய சோதனையில் தெரியவரும்.
இந்த சோதனை முடிவில் உடல் தகுதி பெறாதவர்களின் ஒப்பந்த ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் வெட்டப்படும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இப்படி உடல் தகுதி தேர்வு நடத்தப்படும்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் திறமையான உடற்கட்டை வைத்திருப்போருக்கு ஒப்பந்தத்தைவிட 10 சதவீதம் ஊதியம் அதிகம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Published by


Leave a comment