உறைக்குள் உறங்காத வாள் மதி!

mathy majeed ilmiகாத்தான்குடி: அண்மையில் காத்தான்குடி அல்மநார் கல்லூரி அர்ராசித் மண்டபத்தில் கவிஞன் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு ‘ நூல் வெளியீட்டு விழாவில் காத்தான்குடி கவிஞர் இல்மி அஹமட் லெவ்வை அவர்களினால் அரங்கில் வாசிக்கப்பட்ட வாழ்த்துப் பா.

அன்பன் மதிக்கு
அழகான கவியொன்று
அரங்கில் சொல்ல
ஆசையெனக்கு !
-0-
அவனுக்கும் எனக்கும்
ஓராத்மீக சினேகமுண்டு-
ஓட்டாத, வானமும்
பூமியும் ஒன்றை ஒன்று
இரகசியமாக காதலிப்பதைப்போல !
-0-
இக்காலத்தில்
சாஸ்டாங்க கவிஞர்கள்
முளைக்கின்ற போது -இவனோ
சிம்மாசனங்களின்
சில்லறைகளுக்கு
விலைபோகாதவன்
அதுதான்
எனக்கும் அவனுக்குமுள்ள
காதலின் இரகசியமும் கூட!
-0-
அன்பன் மஜீது..!
பாட்டுக்கு வார்த்தை தேடி
வைகுண்டம் சென்றுவருவான்
வீட்டுக்கு வருவாய் நாடி
வீதிக்கு வருவதும்
கஸ்டமவனுக்கு !
ஆனாலும் -அவன்
புல்லுக்காய்
பல்லுக்காட்டாத புலி !
-0-
பாவலர் தோப்புக்குள்
பூப்பதெல்லாம்
காய்ப்பதில்லை
ஆனாலும் இவனொரு
பழுத்த பலா..
-0-
எச்சரிப்புக்கள்
அச்சுறுத்தல்கள் என்று
முக்காடுகளுக்குள்
ஒழிந்து கொள்ளும்
எழுத்தாழுகைகள் இருக்க
இவனோ..!
சியோனிச அரக்கர்களின்
வெறியாட்டத்தால்

ஈமானிய உம்மாக்கள்
குருதியால்
குழிப்பாட்டப்பட்டபோதும்,
தர்ஹாடவுண்
மக்கள்-
துறவிகள் சிலரின்
துன்புறுத்தலுக்கு
தீனியானபோதும், 
எறிகணைச் சொற்களால்
இணையங்களில்
எறிந்தவன் துணிவோடு…! இவன்!
அதனால்தான்
சொல்கிறேன்
உறைக்குள் உறங்காத வாள் என்று மதியை
-0-
மதி ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு’ –இது
உன் கன்னி பிரசவம்!
-0-
நீ
வாழவேண்டும்
எழுத்துலகை ஆழவேண்டும்
வல்லரசு வைரமுத்துவைப்போல,
வாழ்ந்துபோன கண்ணதாசனைப் போல,
ஏன் நம் கவிக்கோவைப் போல
பாவலர் தோப்பின்
பார்போற்றும்
ஜாம்பவானாய்
பிரகாசிக்க
பிரார்த்திக்கிறேன்.
வாழ்க நீ
வளர்க உன் கவித்துவம்!
-0-
அல்ஹம்துலில்லஹ் !

– கவிஞர்
இல்மி அஹமட் லெவ்வை
காத்தான்குடி

mathy majeed ilmi
கவிஞர் மதியன்பனுடன் (வலம்) கவிஞர் இல்மி அகமட் லெவ்வை (இடம்)

Published by

Leave a comment