மாத்தளையில் பரவிவரும் இனம் தெரியாத சரும நோய்!

mataleமாத்தளை: மாத்தளை மாவட்டத்தில் இனந்தெரியாத நோயொன்று பரவி வருவதாக மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இம்மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சரும நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக மாத்தளை தள வைத்தியசாலையின் வைத்தியப் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.

தென்னாபிரிக்க நாட்டில் அதிகமாகக் காணப்படும் இச்சரும வியாதி ‘மணல் ஈ’ என அழைக்கப்படும் ஒரு வகை கொசுவினால் பரவி வருவதாக நம்பப்படுகின்றது.

மாத்தளை, உக்குவளை, பல்லேப்பொல, கலேவெல, நாவுல, ஒலிலிகந்த மற்றும் தன்கந்த முதலான பிரதேசங்களில் இச்சரும நோயாளர் இனங்காணப்பட்டிருப்பதாக மாவட்ட வைத்தியசாலை அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

சருமத்தில் இந்நோயின் அறிகுறிகள் ஏதேனும் காணப்படுமொருவர் தாமதமின்றி அரச வைத்தியசாலைகளுக்கு சென்று வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவும், மணல் ஈ பரவும் நிலையங்களை அழித்தொழிப்பதன் மூலம் இச்சரும வியாதி பரவுவதை தடுக்கலாம் எனவும், வைத்திய அத்தியட்சகர் டொக்டர் அர்ஜுன திலக்கரத்ன தெரிவித்தார்.

இச்சரும வியாதியினால் பீடிக்கப்பட்ட முதலாவது நபர் 2000 ஆம் ஆண்டு நாவுல பிரதேசத்தில் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment