துபாய்: துபாயில் உள்ள இலங்கை பிரதித் தூதுவர் எம்.எம் அப்துல் றஹீம், துபாய்க்கான குடிவரவு, குடியகழ்வு பிரதான அதிகாரி மேஜர் ஜெனரல் முகம்மட் அகம்மட் அல் மராய் அவர்களை சந்தித்து துபாயில் உள்ள இலங்கையர்களின் நலன் பேணல் மற்றும் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களின் குடியகழ்வு சம்பந்தமான விடையங்களைப்பற்றி கலந்துரையாடினார்.
முக்கியமாக துபாய்க்கு வீட்டு பணிப்பெண்களாக வேலைக்கு செல்லும் இலங்கையர்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பற்றி எடுத்துரைத்தார். அண்மைக்காலமாக கூடுதலான இலங்கைப் பெண்கள் விசிட் வீசா மூலம் துபாய்க்கு கொண்டுவரப்பட்டு வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்கமர்த்தப்படுகின்றனர்.
வேலைப் பழு மற்றும் இதர பிரச்சினைகள் காரணமாக தப்பியோடும் இலங்கைப்பெண்கள் மேலும் பல சிக்கல்களை அனுபவிப்பதுடன் துபாயில் நிர்கதியாகி தவிக்கின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கும், இவ்வாறான இலங்கை பணிப்பெண்களுக்கும் உதவிகளை துபாயில் உள்ள குடிவரவு, குடியகழ்வு பணிமனை உதவ வேண்டும். என அப்துல் றஹீம், மேஜர் ஜெனரல் முகம்மட் அகம்மட் இடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குடியகழ்வு பிரதான அதிகாரி உத்தரவாதம் அளித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்புப் பணியகமும் விசிட் வீசாவில் துபாய் செல்லும் பணிப்பெண்கள் சம்பந்தமாக அண்மையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அவ்வாறு சட்ட விரோதமாக சுற்றுலா வீசாவில் சென்று தொழில் செய்து நட்டாற்றில் விடுபவர்கள் தொடர்பில் பணியகம் எதுவித பொறுப்பையும் ஏற்காது எனவும் அறிவித்தது.
இவ்வாறான ஏமாற்று நபர்களினால் துபாய் சென்று அவதிப்பட வேண்டாம் என இலங்கை பணிப் பெண்கள் கேட்கப்படுகின்றனர். முறையாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் பதிவு செய்யப்பட்டு பயிற்சிகளைக் கடந்த பின்பு வெளிநாட்டுக்கு வேலை வாய்புக்காக செல்பவர்களுக்கு அரசாங்கத்தினதும் மற்றும் இலங்கை வெளிநாட்டு தூதுவராலயங்களினதும் உதவிகள் வழங்கப்படும்.
இதற்கு மாறாக ஏற்கனவே வீட்டுப் பணிப் பெண்களாக விசிட் வீசாவில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அனுப்பிய முகவர்கள் சம்மந்தமாக இலங்கை அரசாங்கம் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதுடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றனர்.
Published by



Leave a comment