பெண் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரிந்துரைத்தார்

daklasபழுலுல்லாஹ் பர்ஹான்

யாழ்ப்பாணம்: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 200 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கித்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள், 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியில் ஈடுபாடு கொண்ட பெண்களுக்கு தொழில் முயற்சி அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கித் தருவதற்கு ஏற்றுக் கொண்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் ஒதுக்கப்படும் நிதியுதவி மூலமாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பொருளாதாரம் மேம்படக்கூடிய வகையில் தொழில் முயற்சிகளுக்கு உதவவும் அவற்றை அபிவிருத்தி செய்யவும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கடந்த 26ஆம் திகதி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் நிதி அமைச்சின் செயலாளர் பி.பி ஜெயசுந்தரவுக்கும் இடையே சந்திப்பொன்று இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Published by

Leave a comment