கொழும்பு: ஆசியாவின் ஆச்சரியம் நோக்கிய அபிவிருத்தி செயற்திட்டமாக கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் வர்த்தகத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது.
புறக்கோட்டை பேரூந்து நிலையத்திற்கு அண்மையாக நிர்மாணிக்கப்பட்ட வர்த்தகத் துறைமுகம் நேற்றைய தினம் 25.08.2014 திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
முன்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வரவேற்றார்.
தொடர்ந்து வர்த்தக தொகுதிக்கான பிரதான வாயில் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
அதனையடுத்து வர்த்தகத் தொகுதியினை அதிதிகள் பார்வையிட்டதுடன் மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டதுடன் பெயர்ப்பலகையும், நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
அத்துடன், வர்த்தக நடவடிக்கைகளையும் அதிதிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்த அதேவேளை, வர்த்தகர்களுக்கான உரிமைப்பத்திரங்களையும் வழங்கி வைத்தனர்.
நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட வர்த்தகத் தொகுதியில் 94 கடைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவற்றில் மரக்கறி, உணவு, உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் இலகுவாக கொள்வனவு செய்ய முடியும்.
மஹிந்த சிந்தனைக்கு அமைவாக ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடா கட்டியெழுப்பும் நோக்கில் இந்த அபிவிருத்தி செயற்திட்டம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இவ் வர்த்தகத் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதம விருந்தினராக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும், கௌரவ விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சிரேஸ்ட அமைச்சர் பௌசி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அஸ்வர், துமிந்தசில்வா, கொழும்பு மாநகர முதல்வர் முஸாம்பில் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறுபட்ட கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
Published by

Leave a comment