லண்டன்: சிரியாவில் ‘இஸ்லாமிய அரசு’ போராளிகளால் கொல்லப்பட்ட அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் ஃபாலியின் தாய், தனது மகன் சிரியா மக்கள் படும் இன்னல்களை வெளியே கொண்டுவரும் பணியில் தனது உயிரை இழந்திருக்கிறார் என்று அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட ஜேம்ஸ் ஃபாலி, மத்தியக் கிழக்குப் பகுதியில் பரவலாக செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர்.
அவரது தலை வெட்டப்பட்டதாகக் காட்டப்படும் வீடியோ ஒன்றில், இஸ்லாமிய அரசு இயக்கத் தீவிரவாத போராளிகள், அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக அவர் கொல்லப்பட்டதாகக் கூறினர்.
ஃபேஸ்புக் மூலம் விடுக்கப்பட்ட செய்தி ஒன்றில், ஃபாலியின் தாய், டையேன் , மற்ற பணயக் கைதிகளை விடுவிக்குமாறு, தீவிரவாத்களுக்கு கோரிக்கை விடுத்தார். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் இவர்களுக்கு எந்த விதமான செல்வாக்கும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த வீடியோ உண்மையானதுதான் என்று அமெரிக்க அதிபர் அலுவலகம் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் இது உண்மையானதுதான் என்று நிரூபிக்கப்பட்டால், ஒரு அப்பாவி அமெரிக்கச் செய்தியாளர் இது போல கோரமான வகையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது பற்றி அமெரிக்கா அருவறுப்படையும் என்று அமெரிக்க அரசுக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி கூறினார்.
ஃபாலி கொலை செய்யப்படுவது போல காட்டு இந்த வீடியோ காட்சிளை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் வெளியிட்டதைத் தொடர்ந்துஇ விடுமுறையில் இருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன் தனது விடுமுறையை பாதியில் முடித்துக்கொண்டு லண்டன் திரும்புகிறார்.
இந்தச் சம்பவம் உறுதி செய்யப்படும் நிலையில், இந்தக் கொலை அதிர்ச்சிகரமானது, கேவலமானது என்று அவர் வர்ணித்தார்.
உளவுத்துறையினர், ஃபாலியைக் கொன்ற கொலையாளியை அடையாளம் காண முயன்று கொண்டிருக்கிறார்கள் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹேமண்ட் கூறினார். இந்தக் கொலையாளி பிரிட்டிஷ் உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் பேசுவது போல் தோன்றுகிறது.
முகமூடி அணிந்த இந்தக் கொலையாளி, இந்த ஊடகவியலாளர் அமெரிக்க வான் தாக்குதல்களுக்கு பதிலடியாக கொல்லப்பட்டார் என்று கூறினார்.
இது ஒரு கோழைத்தனமான செயல் என்றும் இஸ்லாத்துக்கு முரணான செயல் என்றும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Published by



Leave a comment