குர்திஸ்தானில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்

labourerகொழும்பு: ஈராக்கில் தன்னாட்சி அதிகாரம் உள்ள குர்திஸ்தானிலிருந்து வெளியேற முடியாத நிலையில் அந்நாட்டு இராணுவத்தின் நெருக்கடிக்குள்ளானதாக கூறப்படும் இலங்கையர்களில் ஒரு தொகுதியினர் நாடு திரும்பியுள்ளார்கள்.

அந்நாட்டில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் தற்போது நாடு திரும்புகின்ற போதிலும், ஓரு சில தொழில் வழங்குநர்கள் இராணுவத்தை பயன்படுத்தி அவர்கள் வெளியேற முடியாதவாறு தடைகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்துவதாக கூறுப்படுகின்றது.

குறிப்பாக குர்திஸ்தான் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய இலங்கையர்களும் இது போன்ற நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் அவர்களில் 39 பேர் வெளியேற முடியாதவாறு மறைவிடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு அறிவித்திருந்தனர். இவர்களில் 10 பேர் தற்போது நாடு திரும்பியுள்ளார்கள்.

labourer
இலங்கை தொழிலாளர்கள்-குர்திஸ்

நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைக்கு அருகே வாழைக்காலை என்னும் இடத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞரொருவர், தொழில் புரிந்த வந்த விமான நிலையம் போர் காரணமாக மூடப்பட்டுள்ள போதிலும் தங்களின் தொழில் வழங்குநர் அங்கு தொடர்ந்தும் வேலை செய்யுமாறு தாங்களை கட்டாயப்படுத்துவதாகவும், அதற்கு மறுத்தால் இராணுவத்தைப் பயன்படுத்தி தாக்குதல் மற்றும் மறைவிடங்களில் தடுத்து வைத்தல் உட்பட பல்வேறு நெருக்கடிகள் அவரால் ஏற்படுத்தப்படுவதாகவும் அந்த இளைஞர் தெரிவிக்கின்றார்.

”லெபனான் நாட்டவரான தொழில் வழங்குநரின் இந்த செயல்பாடுகளுக்கும் அந்த நாட்டு அரசாங்கத்திற்கும் தொடர்புகள் இருக்கும் என கருத முடியாது. ஆனால் அவர் குர்திஸ்தான் மாகாணத்தில் கடமையிலுள்ள சில இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தியே இந்த அடக்கு முறைகளில் ஈடுபடுகின்றார்” என்றும் அவர் கூறுகின்றார்.

குறித்த விமான நிலையத்தில் பணிபுரிந்த 300ற்கும் மேற்பட்ட இலங்கையர்களில் 39 பேர் நாடு திரும்புவதற்கு விரும்பி இதற்கான அழுத்தங்களை கொடுத்த நிலையில் இராணுவத்திணால் தங்குமிடம் சுற்றி வளைக்கப்பட்டு கை விலங்கிடப்பட்டு அவர்கள் மறைவிடமொன்றில் தடுத்து வைக்கப்பட்ட நிலையிலே தாங்கள் 10 பேர் மட்டும் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அந்த இளைஞன் தனது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை..

இராணுவத்தின் போர் காரணமாக அந்நாட்டில் தற்போது காணப்படும் பாதுகாப்பற்ற நிலைமையை கருத்தில் கொண்டு அங்கு தொழில் புரியும் இலங்கையர்களை அழைத்து வருவதற்கான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் வேண்டுகோளையும் இலங்கை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ள அவர், இந்தியா விஷேட விமானங்களை அனுப்பி தனது நாட்டவர்களை அழைத்துக் கொண்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றார்.

Published by

Leave a comment