வாழ்வும் மரணமும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பது நமது ஈமானிய கோட்பாடு. மறைந்த ஹஸன் மௌலவி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஊடாக பல வடிவங்களில் சேவைகளையும், ஆளுமைகளையும், இஸ்லாமிய நற்சிந்தனையும் தந்தான். இன்று அல்லாஹ்வின் நாட்டப்படி நம் மத்தியிலிருந்து ஒரு சிறந்த உலமா, நாவலர், சேவை செம்மல், புரவலர் எனப் போற்றப்படும் சகோதரர் ஹஸன் மௌலவி நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவரது மறைவால் புகழ் பூத்த கிண்ணியா மண், வளம்மிக்க கிழக்கு மாகாணம் இன்று சோகமே உருவாக காட்சியளிக்கின்றது.
தோற்றத்தில் உயர்ந்த தலைவர் போல் உள்ளத்தாலும் உயர்ந்த எஸ்.எல்.எம். ஹஸன் மௌலவியின் கம்பீர அழகுக் குரலை இனி எங்கே நாம் கேட்போம். ஆசிரியராக பெருமை மிகு அஸ்ஹரி கெய்ரோ பட்டதாரியாய், இஸலாமிய சிந்தனையாளராய் நாடெங்கும் வலம் வந்தார் ஹஸன் மௌலவி.வானொலி, தொலைக்காட்சியால் அல்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம், இஸ்லாமிய நற்சிந்தனைகளை வழங்கி மக்களை இஸ்லாமிய உணர்வூட்டிய மேதை அவர். அவரது நாவில் அழகுத் தமிழும், அருள்மிகு அரபு மொழியும் ரீங்காரமிட்டது. பேச்சால் பிறரை வசப்படுத்தும் அவர் தொறந்தால் புன் சிரிப்பால் மனித உள்ளங்களை கொள்ளை கொண்டார்.
இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களின் அடியொற்றை வாழ்ந்த அவர் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்டார். விதவைகளுக்கு வாழ்வளித்தார், அநாதை சிறுவர்களை அன்பு கொண்டு வளர்த்தார். கிண்ணியா அநாதைகள் இல்லம் எப்பொழுதும் அவர் பெயர் நாமத்தை உலகறியச் செய்யும். உங்களில் சிறந்தவன் நற்பண்பும், பிறரை நேசிப்பவரும் ஆவார் என்ற நபி வாக்கை இவ்வுலகில் மெய்ப்பித்த பெரியார் மௌலவி ஹஸன்.
அரசியலை மானிட சேவையின் வடிகானை காணப்புறப்பட்டார். இருமுறை கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராய் அமர்ந்து சபையை தம் கணீரென்ற குரலால், நற்கருத்தால் மிளரச் செய்த அவர், உலமாக்கள், சமூகத் தலைமைக்கும் தகுதியானவர் என்பதனை நிரூபித்து வெற்றி கண்டார்.
இன்னமும் அவரிடமிருந்து சமூகம், நாடு பல சேவைகளை, சிந்தனை கருத்துக்களை, மார்க்க வழிகாட்டலை பெற காத்திருந்த வேளையில் அவரது மரணம் ஒரு பெரும் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற கவிதை வரி போல வாழ்ந்து மறைந்த அவர்களுக்கு அல்லாஹ் கபுறு வாழ்விலும், மறுமை வாழ்விலும் அவரது பேரருளை வழங்கி மேலான ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை வழங்க இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்.
Published by

Leave a comment