சென்னை: நான் இஸ்லாத்திற்கு மாறக் காரணமே என் அம்மாதான். தொழுகை நேரங்களில் என் அம்மாவே என்னுடன் இருப்பது போல உணர்கிறேன், என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
சமீபத்தில் இந்து மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறி, பரபரப்பை உண்டாக்கியவர் யுவன் சங்கர் ராஜா. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் யுவன் இதுகுறித்து பெரிதாக எதுவும் சொல்லவில்லை.
இந்நிலையில், தான் ஏன் முஸ்லீமாக மாறினேன் என்பது குறித்து ‘டைம்ஸ் ஓஃப் இந்தியா’ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘என் அப்பாவும், அம்மாவும் தீவிர கடவுள் பக்தி கொண்டவர்கள். வீட்டில் ஒரு கண்ணாடி உடைந்தால்கூட பண்டிதர்களை அழைத்து பூஜை செய்பவர் என் அப்பா.
ஆனால் சிறு வயதிலிருந்தே எனக்குள் ஒரு கேள்வி உண்டு. இந்த உலகத்தை ஆட்டுவிக்கும் எல்லாவற்றுக்கும் மேலான அந்தக் கடவுள் எப்படியான உருவத்தில் இருப்பார் என்பதுதான். என் அம்மாவின் மரணம்தான், என்னை இஸ்லாத்துக்கு மாறத் தூண்டியது.
ஒரு வேலையாக மும்பை வந்த நான், சென்னை திரும்பியபோது வீட்டில் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் அதிகமாக இருமத் தொடங்கினார். நானும், என் தங்கையும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துமனையில் என் பக்கத்தில் இருந்த அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு உட்காந்திருந்தேன். அடுத்த நொடியில் அவர் கை விழுந்தது. அம்மா இறந்துவிட்டார்.
நான் கதறியழுதேன். சில நொடிகளுக்கு முன்புவரை உயிருடன் இருந்தவர் இப்போது இல்லை. அப்படியெனில் அவரது ஆத்மா எங்கே போயிருக்கும் என்று அப்போது நினைத்தேன்.
அதற்கான பதிலை நான் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாஹ்விடமிருந்தே எனக்கு நேரடி அழைப்பு வழந்தது. அது ஒரு ஆன்மீக அனுபவம்.
எனது நெருங்கிய நண்பர் ஒருவர் மக்காவிலிருந்து வந்திருந்தார். அங்கு அவர் தொழுகை செய்யப் பயன்படுத்திய சிறு பாய் விரிப்பை எனக்கு பரிசாகக் கொடுத்து, ‘மிகவும் தளர்ந்து போய் இருக்கிறாய். இதிலிருந்து நீ வெளி வர வேண்டும். எப்போதெல்லாம் உனக்கு மனம் கஷ்டமாக உள்ளதோ அப்போது இதன் மேல் அமர்ந்து கொள்..’ என்றார். அவர் கொடுத்த அந்த தொழுகைப் பாயை, அப்போதைக்கு சுருட்டி என் அறையில் ஒரு மூலையில் வைத்துவிட்டு மறந்துவிட்டேன்.
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் என் அம்மா பற்றி, உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். மனசுக்கு ரொம்ப பாரமாக இருந்தது. சட்டென்று என் அறைக்குள் சென்றேன். ஒரு மூலையிலிருந்த அந்த தொழுகை விரிப்பு கண்ணில் பட்டது. எடுத்து அதன் மேல் அமர்ந்தேன். ‘அல்லாஹ்.. என் பாவங்களை மன்னியுங்கள்’ என்று கதறி அழுதேன். அந்த கணமே என் மனபாரம் குறைந்து லேசானதை போல உணர்ந்தேன்.
அதன் பின் குர்ஆனையும் மொழி பெயர்ப்புகளையும் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து இஸ்லாத்தை பின்பற்ற ஆரம்பித்தேன். 2014 ஜனவரி மாதத்தில் தொழுகை செய்வதையும் கற்றுக் கொண்டேன்.
தற்போது ‘யுவன்சங்கர் ராஜா’ என்ற பெயரிலேயே திரைப்படங்களில் நான் பிரபலமாக இருப்பதால் உடனடியாக பாஸ்போர்ட் உட்பட்ட ஆவணங்களில் எனது பெயரை மாற்றப் போவதில்லை. பின்பு மாற்றினாலும் மாற்றிக் கொள்வேன்…
கடைசியாத்தான் அப்பாவிடம் இது பற்றிச் சொன்னேன். ‘நான் குர்ஆன் படிக்கிறேன். அது எனக்கு ரொம்ப நிம்மதியைத் தருகிறது.’ என்றேன் அவரிடம். அப்பா, ‘யுவன்.. நீ இஸ்லாத்துக்கு மாறுவதில் எனக்கு உடன்பாடில்லைஇ’ என்று மட்டுமே சொன்னார்.
ஆனால் எனது அண்ணனும், அண்ணன் மனைவியும் இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள்.
நான் தொழுகை செய்யும் நேரங்களில் எனது அம்மாவே என் கையைப் பிடித்துஇ ‘யுவன் நீ தனியா இருக்கே.. இஸ்லாம் என்ற பெயரில் உனக்கு அடைக்கலம் தரும் மரமா நான் இருக்கிறேன்…’ என்று சொல்வதாக உணர்கிறேன்..!’
– இவ்வாறு அந்தப் பேட்டியில் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.
Published by


Leave a comment