‘சமூக ஒற்றுமையை கொச்சைப்படுத்தாதீர்’- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் முபீன்

mubeen– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுவது அரசாங்கத்தின் சதியென அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.

இக்கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் விடுத்திருக்கும் மறுப்பு அறிக்கையில் தெரிவிப்பதானது,

நீண்ட காலமாக முஸ்லிம் மக்கள், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று ஓர் அணியில் ஒற்றுமைப்படவேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்து வருகின்றனர்.

ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற உள்ளது என்ற செய்தி வெளியானது முதல் கள நிலைமைகளை ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் பல தடவைகள் பதுளை மாவட்டத்தின் பல் வேறு பிரதேசங்களுக்கும் சென்று முஸ்லிம் மக்களை சந்தித்தனர். இச்சந்திப்புக்களில் முஸ்லிம் கட்சிகள் ஓர் அணியில் ஒற்றுமையாக செயற்பட்டால் மாத்திரமே தமக்கான முஸ்லிம் பிரதி நிதியை பெற்;றுக் கொள்ளமுடியும் என்று மக்களால் வலியுறுத்தப்பட்டதுடன் இவ் ஒற்றுமையை ஏற்படுத்தும் பணியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரே மேற் கொள்ளவேண்டும் என்றும் கோரினர்.

mubeen
ULM. முபீன்                                                           ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்

இது தொடர்பாக பல்வேறு முயற்சிகளையும், சந்திப்புக்களையும் முஸ்லிம் காங்கிரஸ் மேற் கொண்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். மலையக முஸ்லிம் கவுன்ஸில் உள்ளிட்ட முக்கிய அமைப்புகளுடன் சந்திப்புத் தொடர்ந்தது.

அமைச்சர் அதாஉல்லா அவர்களின் தேசிய காங்கிரஸிற்கான குறிப்பிடத்தக்க ஆதரவு ஊவாவில் காணப்படாததால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஊவா மாகாண முஸ்லிம் கவுன்ஸில் ஆகிய மூன்றும் இணைந்து போட்டியிடுவது என தீர்மாணிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் கூறுவது போல் இது கொந்து ராத்தோ வாக்கு கொள்ளையோ அல்ல மாறாக ஊவா முஸ்லிம்களின் அரசியல் உரிமையும் இருப்பையும் தக்க வைப்பதற்கான முயற்சியும் முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான ஆரம்பப் புள்ளி என்பதையும் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் விளங்கிக் கொள்ளவேண்டும். முதலில் ஐக்கிய தேசியக்கட்சி உள் வீட்டுப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பே பிற கட்சிகளைப் பற்றிப் பேசுவதற்கான தகுதி அதற்குக் கிடைக்கும். பெண்டாட்டியில் கோபத்தை வைத்துக் கொண்டு பிள்ளையில் சீறும் வக்கற்ற தந்தை போல் ஐக்கிய தேசியக்கட்சி நடக்க கூடாது.

இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் உங்கள் கட்சி நடக்க முடியாமல் நக்கரித்த போது ஊன்று கோலாய் உதவி உங்களை தட்டியெழுப்பி உயிரூட்டி கிழக்கில்.பனிரெண்டு ஆசனங்களுடன் உங்களை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதை மறந்து விடாதீர்கள்.

உங்களோடு நாங்கள் வந்தால் தங்கம் வராவிட்டால் தகரம் என்ற நிலைப்பாட்டை விட்டு விடுங்கள் திஸ்ஸ அவர்களே, என அவ் அறிக்கையில் முபீன் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment