கெய்ரோவில் யுத்த நிறுத்த பேச்சுவார்த்தை! இஸ்ரேல்- பலஸ்தீன குழுக்கள் வருகை!!

israel palestine– AF -90

கெய்ரோ: காஸா பகுதியில் நிலையான யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன குழுவினர் எகிப்து தலைநகர் கெய்ரோ வருகை தந்துள்ளனர்.

காஸா பகுதியில் 28 நாட்களாக இஸ்ரேல் வான் மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் இந்த இனவெறியாட்டத்தில் 1,900 பலஸ்தீனர்கள் பலி கொள்ளப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள்.

மேலும் 9 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். சுமார் 2 லட்சம் பேர் சொந்த வாழ்விடங்களை விட்டு அகதிகளாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். தற்போது அங்கு 72 மணி நேர யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினரிடையே நிலையான யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

•எகிப்து முன்னெடுக்கும் இந்த அமைதி முயற்சிகளுக்கு அமெரிக்காவின் தூதர் பிராங் லோவென்ஸ்டீன் உதவி வருகிறார்.

•இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்த பாலஸ்தீன குழுவினர் கெய்ரோ வந்தடைந்துள்ளனர்.

•ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் மையக் குழு உறுப்பினர்கள் கலீல் அல் ஹயா, இமாத் எல் அலமி மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் தலைவர் கலீத் அல் பாட்ஸ், பாத் தலைவர் பைசல் அபு சகாலா ஆகியோர் பாலஸ்தீன குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

•இஸ்ரேல் தரப்பில் மூன்று பேர் கொண்ட குழுவும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள கெய்ரோ வருகை தந்துள்ளது.

•தற்போதைய 72 மணி நேர யுத்த நிறுத்தத்தை நீட்டித்து நிலையான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்குவதே இப்பேச்சுவார்த்தையின் நோக்கம்.

Published by

Leave a comment