காத்தான்குடி: பலஸ்தீன் காஸா நகரில் இஸ்ரேலியர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , சிறுவர்கள்,பெண்கள்,வயோதிபர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி அங்கு இடம் பெறும் மிலேச்சத்தனமான தாக்குதலை வண்மையாக கண்டித்தும் 01-08-2014 இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் பாரிய கண்டனப் பேரணி ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலிலிருந்து பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இம் மாபெரும் கண்டனப் பேரணியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மூபீன் ,நகர சபை உறுப்பினர்கள், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் காழி நீதிபதி மௌலவி எஸ்.எம்.எம்.அலியார் (பலாஹி) உட்பட ஆயிரக் கணக்கான பொது மக்கள் ,இளைஞர்கள்,சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இக் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டோர் அரபு உலகமே கண்களைத் திற,காஸாவில் குழந்தைகளை கொள்வதை நிறுத்து,சியோனிசப் பயங்கரவாதத்தின் அழிவுக்கு பிரார்த்திப்போம்,காஸாவுக்காக பிரார்த்திப்போம்,பலஸ்தீனுக்கு சுதந்திரம் போன்ற பல்வேறு தமிழ்,சிங்கள,ஆங்கில பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
பேரணி இறுதியில் காஸா நகரில் இஸ்ரேலியர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டித்தும்,அதனை நிறுத்த கோரியும் இலங்கை அமெரிக்க தூதரகம் ,முஸ்லிம் நாடுகளுக்கான தூதுவராயலயங்கள் ,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்புவதற்கான மஹஜர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக வைத்து கையளிக்கப்பட்டது.
இப் பாரிய கண்டனப் பேரணி காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயளிலிருந்து ஆரம்பமாகி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.
பேரணி இறுதியில் இஸ்ரேல் நாட்டுக் கொடி தீ மூட்டி எரிக்கப்பட்டது.
கண்டனப் பேரணி இடம்பெற்ற பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
Published by




Leave a comment