தனக்கு வழங்கப்பட்ட அமெரிக்க யூதர்களின் விருதை திருப்பிக்கொடுத்தார் துருக்கி பிரதமர்
நியுயோர்க்: அமெரிக்க யூத கொங்கிரஸினால் வழங்கப்பட்ட விருதை துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டோகன் திருப்பி அளித்துள்ளார். இஸ்ரேலை கடுமையாக விமர்சிப்பதாக எர்டோகன் மீது யூத கொங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையிலேயே குறித்த விருதை அவர் திருப்பி அளித்துள்ளார்.
நியுயோர்க்கை மையமாகக் கொண்டு இயங்கும் யூத கொங்கிரஸ் அவை, எர்டோகன் யூத மக்களுக்கு எதிராக துருக்கி நாட்டவர்களை வன்முறைக்கு தூண்டுவதாக கடந்த வாரம் குற்றம் சாட்டி இருந்தது.
மத்திய கிழக்கு அமைதிக்காக வழங்கப்பட்ட அந்த விருதையும் திருப்பி தரும்படி அந்த அமைப்பு எர்டோகனை கோரியிருந்தது. துருக்கி பிரதமர் பெருமகிழ்ச்சியுடன் அதனை செய்வார் என்று அமெரிக்காவுக்கான துருக்கி தூதுவர் சர்தர் கிளிக் விளக்கம் அளித்திருந்தார்.
காசா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலின் செயற்பாட்டை கண்மூடி பார்த்திருக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.
Leave a comment