காத்தான்குடி: காத்தான்குடியில் கடந்த காலங்களில் இடம்பெற்றுவந்த பெருநாள் தொழுகைகளுள், இவ்வருட நோன்புப் பெருநாள் தொழுகைகளின் பின்னர் மக்களிடையே பல சலசலப்புக்கள் இடம்பெற்றுவருவதை அவதானிக்க முடிகிறது.
உலகில் எப்பிரதேசத்தில் பிறைகண்டாலும், அதனைப் பின்பற்றி உலகம் முழுவதும் ஒரே தினத்தில் பெருநாள் இடம்பெறவேண்டும் எனற நோக்கில் சர்வதேச பிறையைப் பின்பற்றிவரும் காத்தான்குடியின் இஸ்லாமிய அமைப்புக்கள் இரண்டாகும். தாருல் அத்ர் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாத் ஆகும்.
நோன்புப் பெருநாள் தொழுகை தாருல் அத்ர் -2014
அடிப்படைக் கொள்கைகளிலிருந்து மார்க்க விடயங்களில் இவ்விரு அமைப்புக்களுக்குமிடையே மிகப்பாரிய கருத்து முரண்பாடுகள் அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் இருந்து வருகின்றன. ஆனால் சர்வதேச பிறை விடயத்தில் மாத்திரம் ஒருமித்த கருத்தை இவ்விரண்டு அமைப்புக்களும் கொண்டிருந்தாலும்கூட, எங்களுக்கு பெருநாள் ஒன்றாக இருந்தாலும், எங்களின் பெருநாள் தொழுகை திடல் வேறாகவே இருக்கும் என்பதையும் இரு அமைப்புக்களும் எப்போதுமே வேறுபட்டவர்கள் என்பதை காத்தான்குடிக்கும் உலகுக்கும் பறைசாற்றி வருகின்றனர்.
நோன்புப் பெருநாள் தொழுகை தேசிய தௌஹீத் ஜமாஅத்-2014
அ.இ. ஜம்மியத்துல் உலமாவையும், இலங்கைப் பிறையையும் பின்பற்றி பெருநாள் கொண்டாடும் அமைப்புக்கள்:
மேற்படி தலைப்பின்கீழ், காத்தான்குடியில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பெருநாளைக் கொண்டாடிவருகின்றனர். இவர்களுள் காத்தான்குடி மற்றும் அ.இ.ஜ.உ. சபையைப் பின்னபற்றுபவர்களும், மேலும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம், இஸ்லாமிக் சென்ரர், அல்மனார், சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் ஆகிய தௌஹீத் அமைப்புக்களும், அப்துர் ரஊப் மௌலவி தரப்பு மற்றும் அப்துல்லாஹ் பயில்வானின் சில ஆதரவாளர்களும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் வழிகாட்டலுக்குள் அல்லது இலங்கைப் பிறையை அடிப்படையாகக் கொண்டு பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
அது மாத்திரமன்றி, சர்வதேசப் பிறை சரிஎன்று மனதால் ஏற்றுக்கொண்டு, நோன்பு பிடித்துவிட்டு, ஊரோடு சேர்ந்து பெருநாள் கொண்டாடலாம் என்றும் இன்னும் சிலர் இருக்கின்றனர். இவர்கள் மனைவி, நண்பர்கள் மற்றும் ஊருக்கு தங்களை சுதாகரித்துக் கொண்டு, சர்வதேச பிறைத்திடலுக்குச் சென்று தொழாமல் அ.இ.ஜ.உலமாவின் பெருநாளன்று பெருநாள் கொண்டாடி வருகின்றனர். இவ்வாறானவர்களை ஹஜ் பெருநாளில் அதிகமாகக் காணலாம்.
அதாவது, அரபா நோன்பை அரபா (மக்கா) தினத்தன்று பிடித்துவிட்டு, இலங்கையுடன் சேர்ந்து பெருநாளைக் கொண்டாடுவர் இவர்களும் இத்தலைப்பின்கீழ் உள்ளடங்குவர்.
அ.இ. ஜ. உலமாவை இவ்வமைப்புக்கள் பின்பற்றி பெருநாளை கொண்டாடினாலும், இவர்களின் பெருநாள் தொழுகைகள் வேறாகவே இடம்பெற்றுவருகின்றன.
நோன்புப் பெருநாள் தொழுகை இஸ்லாமிக் சென்ரர்- 2014
இஸ்லாமிக் சென்ரர் ஏற்பாடு செய்யும் நபி சுன்னாவான திடல் தொழுகையில், காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா சபை உறுப்பினர்களையோ, உலமாக்களையோ காணமுடியாது.
இஸ்லாமிக் சென்ரர் மற்றும் பிற தௌஹீத் அமைப்புக்களிலிருந்து பிரிந்து தற்பொழுது சிறிலங்கா தௌஹீத் ஜமாத்தாக உருப்பெற்றிருக்கும் இவ் அமைப்பும் இந்த ஊர் ஒற்றுமை என்ற திடல் தொழுகையைத் தவிர்த்து, வேறாக தொழுது தங்களது தனிப்பட்ட கொள்கையை வெளிக்காட்டுகின்றனர்.
அப்துர் ரஊப் மௌலவியின் தரப்பு, அவர்கள் மூதாதையர்களைப் பின்பற்றிவருவதால், என்ன நடந்தாலும், திடல் தொழுகைக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அவர்கள் தங்களது பத்ரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலிலேயே பெருநாள் தொழுகையை தொழுது கொள்கின்றனர்.
காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா மற்றும் சம்மேளனத்துக்குக் கீழ் அமைந்துள்ள பள்ளிவாயல்கள் அனைத்திலும் பெருநாள் தொழுகைகள் அப்பள்ளிவால் கதீப்மார்களை வைத்து இடம்பெறுகின்றன.
கணிப்பு:
சர்வதேசப் பிறையைப் பின்பற்றி ஊரைக் குழப்பி ஒற்றுமையைச் சிதைக்கிறார்கள் என்று பெரும்பாலான மக்களால் விமர்சிக்கப்படும் தாருல் அத்ர் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தினர் இரண்டு குழுக்களாகவே பிரிந்து தொழுது முடித்து பெருநாள் கொண்டாடி முடித்து விடுகின்றனர்.
ஆனால், அ.இ.ஜ.உலமாவையும், இலங்கைப் பிறையையும் பின்பற்றுபவர்கள் இங்கு எதை எதிர்பார்க்கிறார்கள் என்பது வேடிக்கையானது. இவர்களுக்குத் தேவை பிறை தென்பட்டது என்ற அ.இ.ஜ.உ மாவின் செய்தியே தவிர, ஒற்றுமைப் பெருநாள் தொழுகை என்ற நோக்கமல்ல.
நோன்புப் பெருநாள் தொழுகை இஸ்லாமிக் சென்ரர்- 2014
யார் எங்கு வேண்டுமானாலும் தொழலாம். அன்றைய தினம் எல்லோரும் வாய்பிளந்து சாப்பிட்டால் போதுமானது என்ற நோக்கத்தில்தான் இவ்வமைப்புக்கள் பெருநாளை எதிர்பார்க்கின்றன.
எனவே சர்வதேசப் பிறையைப் பின்பற்றினால் ஊருக்குள் இரண்டு குழுக்கள் வேறாக பெருநாள் தொழுகையை தொழுதுகொள்ளும். இலங்கைப் பிறையைப் பின்பற்றினால் ஊருக்குள் சுமார் 50 இடங்களில் 50 குழுக்களாக பெருநாள் தொழுகைகள் இடம்பெறும்.
எனவே, ஒற்றுமை என்ற பெருநாள் காத்தான்குடிக்கு எச்சந்தர்ப்பத்திலும் வரப்போவதில்லை. பெருநாள் சாப்படு விடயத்தில் மாத்திரம் எப்போதாவது ஒரே நாளில் அது இடம்பெறலாமே தவிர, பெருநாள் தொழுகை என்ற அடிப்படை சுன்னாஹ் விடயத்தில் அனைவரும் சுயநலவாதிகளே. யார் யாரையும், விமர்சிப்பதற்கு நாங்கள் அருகதையற்றவர்கள் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்.
Leave a reply to Irfan Cancel reply