கொழும்பு: மோசடி செய்து பிரித்தானிய வீசாவை பெற முயற்சித்த கணவன், மனைவியை கொழும்பு மோசடி தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இவர்கள் பிரித்தானிய வீசாவை பெறுவதற்கான கடவுச்சீட்டில் உத்தியோகபூர்வமற்ற வகையில் மாற்றங்களை செய்தும் முறைகேடான முறையில் வீசாவுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர்.
பிரித்தானிய வீசா மற்றும் குடிவரவு பிரிவினரால் இவர்கள் கொழும்பு மோசடி பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் ஏற்கனவே வீசா பெற விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டிருந்ததுடன், நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் கடவுச்சீட்டில் தூதரகத்தினால் பதிக்கப்பட்டிருந்த முத்திரையை அழித்துள்ளனர்.
அத்துடன் ஏற்கனவே வீசா நிராகரிக்கப்பட்டமை குறித்தும் அவர்கள் தமது விண்ணப்பங்களில் குறிப்பிட்டிருக்கவில்லை. இவர்களில் வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பிரித்தானியாவுக்கு பயணம் செய்ய 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்கள் இலங்கை அதிகாரிகளின் விசாரணைகளையும் எதிர்நோக்கியுள்ளனர். பிரித்தானியாவின் வீசா விதிமுறைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது என பிரித்தானிய தூதரகத்தின் வீசா மற்றும் குடிவரவு நடவடிக்கை முகாமையாளர் டொனி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். போலியான ஆவணங்களையோ, மோசடியான ஆவணங்களையோ சமர்ப்பிக்க வேண்டாம் என வீசா விண்ணப்பதாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.TW
Published by

Leave a comment