மலேசிய விமானம் யுக்ரைனில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது!

PLANE 2கோலாவம்பூர்: மலேஷிய விமானம் யுக்ரெய்னில் விழுந்து நொருங்கியதாக ஆரம்ப கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் 295 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் அம்ஸ்டர்டமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இந்த விபத்து நடந்திருக்கிறது.

தனது விமானம் MH17 உடனான தனது தகவல்தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக மலேஷியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடைசியாக அந்த விமானத்துடனான தொடர்பு என்பது யுக்ரெய்ன் வான்பரப்பில் பறந்தபோது கொண்டிருந்தபோது தான் என்றும் அந்த விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறது.

யுக்ரெய்னுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் கிழக்கு யுக்ரெய்னில் இந்த விமானம் தரையில் எரிந்ததை கண்டதாக மாஸ்கோவில் இருக்கும் வான்வழி கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அந்த குறிப்பிட்ட விமானம் ரஷ்ய வான்பறப்பிற்குள் நுழையவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விமானம் சுமார் 33,000 அடி உயரத்தில் ஏவுகணை மூலம் தாக்குதலுக்கு உள்ளானதாக யுக்ரெய்னின் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆண்டன் ஹெரஷெங்கோ தெரிவித்ததாக அசோசியேட்டர் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.

கிழக்கு யுக்ரெய்னில் ராணுவ விமானங்கள் பல ஏவுகணைதாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த பிராந்தியத்தில் தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் யுக்ரெய்னிய அரசை எதிர்த்து சண்டையிட்டு வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து தமக்கு தெரியவந்திருப்பதாக கூறும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம், என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துவருவதாகவும் தெரிவித்திருக்கிறது.

Published by

Leave a comment