ஹஜ் பயணிகள் பகிர்ந்தளிப்பிலும் ஊழல் : உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
கொழும்பு: புனித யாத்திரையும் வியாபாரமாகியதால் ஹஜ் முகவர்களுக்கிடையில் எழுந்த ஊழல்களையடுத்து, முகவர்களிடையே பகிர்ந்தளிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு முஸ்லிம் கலாச்சார திணைக்களத்திற்கு இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செரெண்டிப் மற்றும் உம்ரா யாத்ரிகர்களின் சங்கத்தினால் தாக்கல் செய்த மனு ஒன்றை ஆராய்ந்த பின்னர் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது.
இந்த வருடம் இலங்கையில் இருந்து 2240 ஹஜ் பயணிகள் வருவதை சவுதி அரசாங்கம் அனுமதித்துள்ளது.
இந்த எண்ணிக்கையை ஹஜ் பயண ஏற்பாட்டு நிறுவனங்களிடையே பகிர்ந்தளிப்பதில் முறைகேடுகள் நடப்பதாக மனுவில் முறையிடப்பட்டுள்ளது. அரசியல் தலையீடுகள் காரணமாக இந்த முறைகேடுகள் நடந்திருப்பதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பயண ஏற்பாட்டு நிறுவனங்களிடையே நேர்முகத் தேர்வு நடத்தி மதிப்பெண்களின் அடிப்படையில் பயணிகள் எண்ணிக்கையை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது விதி என்று மனுதாரர்களில் ஒருவரான முகம்மட் விளக்கினார்.
ஆனால் தான் எடுத்த மதிப்பெண்ணை எடுத்த வேறு இரண்டு ஏஜெண்டுகளுக்கு கூடுதலான பயணிகள் எண்ணிக்கையை ஒதுக்கிவிட்டு தனக்கு குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முகம்மட்
மனுதாரர்களின் வாதத்தை பரிசீலித்த நீதிபதிகள், வரும் 14ஆம் தேதிவரை பகிர்ந்தளிப்பு பணியை நிறுத்திவைக்கவும், அன்றைய தினம் விளக்கம் தருமாறும் முஸ்லிம் கலாச்சார திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
எல்லா விவகாரங்களிலும் மூக்கை நுழைக்கும் அரசியல்வாதிகளின் ஏஜெண்டுகள், புனித ஹஜ் யாத்திரை விவகாரங்களிலும் தங்களது ஊழல் மோசடிகளை நுழைப்பதற்கு எடுத்த முயற்சியே தற்பொழுது இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது.
Leave a comment