கொழும்பு: இணையத்தளம் ஊடாக யுவதிகளுடன் தொடர்புகொண்டு திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து பண மோசடியில் ஈடுபட்டுள்ள பிரதான சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸ் ஊடாக ‘ரெட் அலர்ட்’ விடுக்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
‘திருமண சேவை’ இணையத்தளத்திலுள்ள விபரங்களை சேகரித்து குறித்த பெண்களுடன் தொடர்புகொண்டு திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிப்பதுடன் அவர்களுக்கு பெறுமதியான பரிசுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ள கும்பலொன்றின் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிகம யட்டிபில மிரிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரிடமிருந்து 478,620 ரூபாவை இவர்கள் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக செய்த முறைப்பாட்டையடுத்தே இவர்கள் இருவரும் கைதாகியுள்ளனர்.
கைதான இருவரிடமும் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பிரதான சந்தேக நபர் தற்போது மலேஷியாவில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பிரதான சந்தேக நபரை கைது செய்ய சர்வதேச பொலிஸ் ஊடாக (இண்டர் போல்) ‘ரெட் அலர்ட்’ அறிவித்தல் விடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
Published by


Leave a comment