மெல்போர்ன்: இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குத் தஞ்சம் கோரி படகில் பயணம் செய்த 41 பேர்களை நடுக்கடலில் மறித்து, பின்னர் அவர்களை இலங்கை அதிகாரிகளிடம் நடுக்கடலிலேயே ஒப்படைத்துவிட்டதாக அவுஸ்திரேலியா ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த ஒப்படைப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக அது கூறியது.
இவர்கள் இலங்கையின் மட்டக்களப்புக்கு அப்பால், கடற்பரப்பில் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் திங்கட்கிழமை கூறினார்.
இவர்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே தஞ்சம் கோர முகாந்திரம் இருந்திருக்கலாம் என்று கூறிய ஸ்கொட் மொரிசன், ஆனால் அவரும் தன்னுடன் வந்தவர்களுடனேயே இலங்கை திரும்ப முடிவெடுத்தார் என்று மொரிசன் கூறினார்.
அவுஸ்திரேலியாவுக்குத் தஞ்சம் கோரி வந்த சுமார் 200 இலங்கைத் தமிழர்களை அவுஸ்திரேலியா இலங்கைக்குத் திரும்பி கையளித்திருக்கலாம் என்ற அச்சங்கள் முன்னதாக நிலவின. இவர்களில் பலர் தமிழர்கள். இவர்கள் இலங்கைக்குத் திரும்பினால் சித்ரவதைக்கு ஆளாக்கப்படும் ஆபத்து இருப்பதாகக் கூறியிருந்தனர்.
ஆனால் இந்த முந்தைய சம்பவங்களைப் பற்றி அவுஸ்திரேலியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமை திரும்ப அனுப்பப்பட்டவர்களில் நான்கு பேர் மட்டுமே தமிழர்கள் என்று அது கூறியிருக்கிறது.
இதில் சம்பந்தப்பட்ட எல்லா தஞ்சம் கோரிகளும், அலுஸ்திரேலியாவின் சர்வதேசக் கடப்பாடுகளுக்கமைய, மேலும் கூடுதல் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என்று அவுஸ்திரேலியா கூறியது.
தஞ்சம் கோரிகளை நடுக்கடலில் மறித்து, விசாரித்து, அவர்களின் சொந்த நாட்டுக்கே திரும்ப அனுப்பியதாக அவுஸ்திரேலியா ஒப்புக்கொள்வது இதுவே முதன் முறையாகும்.
அவுஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்திருக்கும் குடிவரவு விஷயங்களுக்காகப் பேசவல்ல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் மேரிஸ், நம்பகத்தன்மையுடனான ஒரு விசாரணை அமைப்பு இருந்தால்தான் அவுஸ்திரேலியா தனது சர்வதேச கடப்பாடுகளை பூர்த்தி செய்ய முடியும்.
ஆனால் படகை இலங்கையை நோக்கித் திருப்பிவிட்ட பின்னர், வீடியோ தொடர்பு மூலம் நடத்தப்பட்ட விசாரணை மூலம் இந்த நம்பகத்தன்மையுடனான விசாரணை நடந்தது என்று கூறமுடியுமா என்பது குறித்து எங்களுக்குக் கவலை இருக்கிறது என்றார்.
Published by
![boat-with-500-libya-refugees-runs-aground-in-italy-2011-05-08_l[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/boat-with-500-libya-refugees-runs-aground-in-italy-2011-05-08_l1.jpg?w=150&h=108)
Leave a comment