பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
குவைத்: குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த ஒன்பது ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC) கடந்த வருடம் (2013) புனித ரமழான் மாதம் முழுவதும் குவைத்தில் முதல் முறையாக நோன்புக் கஞ்சியுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை சங்கத்தின் தமிழ் ஜும்ஆப் பேருரை நிகழ்த்தப்படும் பள்ளிவாசலில் சிறப்பான முறையில் நடத்தியது அனைவரும் அறிந்த செய்தி.
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 200 நபர்கள் முதல் விடுமுறை நாட்களில் உள் பள்ளிவாசல் நிரம்ப அதிகபட்சம் 600 நபர்கள் வரை கலந்து கொண்டனர். குவைத் அவ்காஃப் ரூ இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யபட்ட சிறப்பு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 700 சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.
குவைத் அரசாங்க பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள், பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர். குறிப்பிட்ட விடுமுறை நாட்களில் பெண்களுக்கும் நோன்பு திறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து நாட்களிலும் சுமார் 10,000 (பத்தாயிரம்) நபர்கள் வரை கலந்து கொண்டனர். குவைத் வெளிநாட்டு அமைப்புகள் வரலாற்றில் இது ஓர் மைல்கல் என்றால் அது மிகையல்ல. K-TIC சங்கம் ஏற்பாடு செய்திருந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் குவைத் வாழ் தமிழ் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அல்ஹம்து லில்லாஹ்…!
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் நோன்புக் கஞ்சியுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வருடத்தின் முதல் நாள் இஃப்தார் நிகழ்ச்சியில் 20 சகோதரிகள் உட்பட 450க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் சில புகைப்படங்கள் இணைப்பில்…
குவைத்தில் வசிக்கும் சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுடன், தங்களின் சொந்தங்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வருமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் சங்க நிர்வாகிகள்.
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்
குவைத்.
Published by



Leave a comment