கொழும்பு: தேசிய அருங்கலைகள் சார்ந்த கைப்பணி கைத்தொழிலாளர்களின் உற்பத்திகளை பரவலாக மக்கள் மயப்படுத்தி மக்களது வரவேற்புகளுக்கு உட்படுத்துதல் அவ் உற்பத்திகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சிறந்த சந்தைவாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் கைத்தொழில் கைப்பணியாளர்களை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வருடாந்த ரீதியில் கைப்பணி கைத்தொழில் கண்காட்சி மற்றும் விற்பனைக் கூடங்கள் நடாத்தப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேற்படி அமைச்சின் கீழுள்ள தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (26) கொழும்பு கலாபவனத்தில் 20 தேசிய கைப்பணியாளர்களது தயாரிப்புக்களின் கண்காட்சி மற்றும் விற்பனை கூடங்கள் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய கைப்பணித்துறையை நாடளாவிய ரீதியில் வளர்த்தெடுப்பதற்காக எனது அமைச்சு பல்வேறு செயற்திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றது.
தேசிய கைப்பணித்துறையை வளர்த்தெடுக்கும் நோக்கில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் அடிக்கடி எமக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்.இந்த நிலையில் நாம் தேசிய கைப்பணியாளர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் அவர்களது உற்பத்திகளை பரவலாக அறிமுகம் செய்தும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் சந்தைவாய்ப்புக்களை உருவாக்கியும் வருகின்றோம்.
இவ்வாறான செயற்பாடுகளின் போது எனது அமைச்சின் செயலாளர் திரு சிவஞானசோதி அவர்களும் தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் புத்தி கீர்த்திசேன அவர்களும் பாரிய பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர்.
இன்றைய இந்தக் கண்காட்சியானது கடந்த வருடத்தை விடவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. அடுத்தடுத்த வருடங்களில் இது மென்மேலும் சிறப்புற நடைபெறும் என நம்புகின்றேன் என்றும் தெரிவித்தார்.
மேற்படி கண்காட்சி மற்றும் விற்பனை கூடத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் அவர்கள் அனைத்து கண்காட்சி மற்றும் விற்பனைகூடங்களையும் தனித்தனியாகப் பார்வையிட்டதுடன் கைப்பணி உற்பத்தியாளர்களுடனும் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
அமைச்சர் அவர்களின் ஆலோசகர் திருமதி வீ.ஜெகராஜசிங்கம், அமைச்சின் மேலதிக செயலாளர்கள் திருமதி மங்கனிக்கா அதிகாரி, திரு சுசந்த டி சில்வா, அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வி தங்கேஸ்வரி, சிரேஸ்ட துணைச் செயலர் திருமதி புஸ்பா குணவர்த்தன. கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தலைவர் நவாப் ரஜாப்தீன் தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தலைவர் மார்சல் ஜனதா மற்றும் அமைச்சு அதிகாரிகள் திணைக்களங்களின் அதிகாரிகள் கைப்பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சி இன்றிலிருந்து நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment