ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கு எதிரான வழக்கு வாபஸ்

SLMMF.JPG1பழுலுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கு எதிரான வழக்கு எந்தவித நிபந்தனையுமின்றி இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் செயலாளரான பி.எம்.முர்ஷிதீனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கே வாபஸ் பெறப்பட்டது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2009,10 ஆண்டின் பொதுச் செயலாளராக செயற்பட்ட பி. எம். முர்ஷிதீன் குறித்த பதவியிருந்தும் போரத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து கடந்த 2010ஆண்டு மே மாதம் நீக்கப்பட்டார். இதற்கு எதிராக 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் பி.எம்.முர்ஷீதின் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரமும் போரத்தின் 2009,10 ஆண்டின் செயற்குழுவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் காரணமாக 2010ஆம் ஆண்டு நடைபெறவிருந்து போரத்தின் வருடாந்த மாநாட்டுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் அது நீக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பி.எம்.முர்ஷிதீன் சார்பாக நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி எம்.பஸீன் இந்த வழக்கினை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

இதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பாக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி யூ. அப்துல் நஜீம் ஆட்சேபனை தெரிவிக்காமையினால் குறித்த வழக்கினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு விசாரணைகளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி யூ. அப்துல் நஜீம் இலசமாக ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த நான்கு வருடங்களாக எந்தவித கட்டணமும் பெறாது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பாக குறித்த வழக்கு விசாரணைகளில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி யூ. அப்துல் நஜீமிற்கு மீடியா போரம் நன்றி தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment