குருக்கள்மடம்: மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் 1990 காலப்பகுதியில் விடுதலை புலிகளால் கடத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் (ஜனாசாக்கள்) புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குருக்கள்மடம் கடற்கரையோரப் பகுதியை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ் நேற்று 23 திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புலிகளால் கடத்தப்பட்டு 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் (ஜனாசாக்கள்) புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும்; குருக்கள்மடம் கடற்கரையோரப் பகுதியில் தனது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சடலத்தை (ஜனாசாவை) இஸ்லாமிய முறைப்படி அடக்கம்செய்ய அதனை தோண்டி எடுத்து தருமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் காத்தான்குடி நகரசபை உறுப்பினரும், ‘லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான றஊப் ஏ மஜீத் அண்மையில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.
இதை ஆராய்ந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இவ் வழக்கு 23-06-2014 நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது முறைப்பாட்டாளரான காத்தான்குடி நகரசபை உறுப்பினர் றவூப் ஏ மஜீத் தனது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தினை களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு தான் அடையாளப்படுத்தியதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து களுவாஞ்சிக்குடி பொலிஸார் கேட்டுக்கொண்டதற்கிணங்க எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி (1) செவ்வாய்க்கிழமை உரிய இடத்தினை தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ் உத்தரவிட்டார்.
சடலங்கள் (ஜனாசாக்கள்) புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும்; இடத்தை கடந்த 22-03-2014 சனிக்கிழமை காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment