அளுத்கம: தர்கா நகர், அளுத்கம பகுதிகளில் ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து விசாரித்து ஆறுதல் கூறவும், தேவைகள் அறிந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட குழுவொன்று அதனது பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்களின் தலைமையில் நேற்று 2014.06.18 ஆம் திகதி புதன் கிழமை சென்று வந்தது.
வன்செயல்கள் ஆரம்பித்த நேரம் முதல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது களுத்துறை மாவட்டக்கிளையின் மூலம் தேவையான தகவல்களை பெற்றதுடன் அம்மக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பவற்றை பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்வதிலும் முழு மூச்சாய் பாடுபட்டது. அதனடிப்படையில் அன்று முதல் இன்று வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவற்றை அனுப்பிவைத்துக் கொண்டிருக்கின்றது.
அங்கு நிகழ்ந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் நிகழாதிருக்க வேண்டுமென்பதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தன்னாலான நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும் அது பூரணமான பயனைத் தரவில்லை என்பது கவலையுடன் குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட குழு பாதிக்கப்பட்ட மக்களையும் மரணங்கள் சம்பவித்த குடும்பத்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியது. அவ்வமயம் அப்பிரதேசத்துக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியின் வீஷேட கூட்டத்திலும் கலந்து கொண்டதோடு அப்பிரதேச பௌத்த மத குருமார்களையும், சந்தித்து பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் சமாதானத்தையும் சக வாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான வழி முறைகள் பற்றியும் கலந்துரையாடியது. இக்குழுவில் அஷ்-ஷைக் ஹஸன் பரீத், அஷ்-ஷைக் யூசுப் முப்தி, அஷ்-ஷைக் முர்ஷித் முழப்பர், அஷ்-ஷைக் பாழில் பாறூக், அஷ்-ஷைக் அர்கம் நூர் ஹாமித், அஷ்-ஷைக் அப்துர் றஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதே சமயம் நிவாரண உதவிகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் சம்பந்தமான முக்கிய கலந்துரையாடலொன்று ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் றிஸ்வி முப்தி அவர்களின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. அக்கலந்துரையாடலில் ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக், உப தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஸி. அகார் முஹம்மத் மற்றும் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் முஸ்லிம் தொண்டர் அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கலந்துகொண்டனர்.
முஸ்லிம் சமூகத்துக்கிடையிலான ஒற்றுமையும் மாற்றுமத சகோதரர்களுடனான புரிந்துணர்வும் சகவாழ்வும் கட்டியெழுப்பப்படவேண்டும். அனைத்து அமைப்புக்களும் அதனை முன்னிலைப்படுத்தி செயற்படவேண்டும் என்ற விடயம் அனைவராலும் வலியுறுத்தப்பட்டது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உடனடி நிவாரண உதவிகள், சேத மதீப்பீடுகள், சட்ட நடவடிக்கைகள், உளவள ஆலோசனைகள்;, ஆன்மீக, தார்மீக வழிகாட்டல்கள், பாதிப்புகளின் தகவல்கள் திரட்டல், நாட்டின் வேறு எந்தப் பகுதிகளிலும் இத்தகைய வன்செயல்கள் நடைபெறாமலிருப்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் என்பனபோன்ற விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டு பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக் தெரிவித்தார்.
Published by

Leave a comment