அளுத்கம சம்பவம்… நகரசபை உறுப்பினர் பாக்கீர் சமர்ப்பித்த கண்டணப் பிரேரணையும் உரையும்

 

bakeer[1]பழுலுல்லாஹ் பர்ஹான்

அளுத்கம: அண்மையில் அளுத்கம, பேருவளை, தர்கா நகர் ஆகிய பிரதேசங்களில் பொதுபலசேனா, சிங்கள ராவய போன்ற பௌத்த தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன குரோத நடவடிக்கைகளைக் கண்டித்து காத்தான்குடி நகரசபையின் விசேட கூட்டத்தில் நகரசபை உறுப்பினர் அல்ஹாஜ் HMM. பாக்கீர் சமர்ப்பித்த கண்டணப் பிரேரணையும் அது தொடர்பான உரையும்.

கௌரவ தவிசாளர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே அணைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த 16.06.2014 அன்று இலங்கையின் தென் பகுதியான களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, தர்கா நகர், பேருவளை போன்ற பிரதேசங்களில் பொதுபலசேனா, சிங்கள ராவய போன்ற சிங்களப் பேரினவாதக் குழுக்களால் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இன குரோத செயற்பாடுகள் இன்று இந்தநாட்டிலுள்ள முஸ்லிம்களை மிகமோசமாக பாதிப்படையச் செய்துள்ளது. இலங்கையில் 74% மான பௌத்தர்களும் 12%மான தமிழர்களும் 10%மான முஸ்லிம்களும் செறிந்து வாழ்கின்றார்கள். இனங்களுக்கிடையிலான ஐக்கியம், புரிந்துணர்வு, சகவாழ்வு, மதசகிப்புத்தன்மை போன்ற விடயங்கள் இந்த பொளத்த தீவிரவாத குழுக்களுடைய அண்மைக்கால இன விரோத நடவடிக்கைகளால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

கௌரவ தவிசாளர் அவர்களே!

இலங்கையினுடைய வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது 1883ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கெதிரான முதலாவது இனக்குரோத செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு 1915ஆம் ஆண்டு மீண்டும் ஓர் மோசமான சிங்கள முஸ்லிம் கலவரத்தை தோற்றுவித்தது அதன் பின்பு 2001ஆம் ஆண்டு மாவனெல்லைக் கலவரம் பௌத்த மதத்தினுடைய அடிப்படைக் கோட்பாட்டையே மீறிய ஒன்றாக அரங்கேறியது இத்தனைக்கும் மேலாக 30வருடங்களாக உள்நாட்டில் காணப்பட்ட யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்று சர்வதேச விசாரணைகள் என்றும் தீர்வுத் திட்டம் என்றும் பேசிக் கெண்டிருக்கும் போது மீண்டும் ஓர் இனக்குரோத செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி பெரும்பான்மைச் சமூகம் ஒர் சிறுபாண்மைச் சமூகத்தை அடக்கியாள நினைப்பது இந்தநாட்டில் மீண்டும் ஓர் வரலாற்றுத் தவறை தூபமிடுவதற்கு ஏதுவாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

கௌரவ தவிசாளர் அவர்களே!

அன்பையும் கருணையையும் வலியுறுத்திப் போதிக்கும் புத்த பெருமானின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவததாகக் கூறி இன்று எந்தவிதமான காரணங்களுமின்றி அநியாயமாக முஸ்லிம் மக்களுடைய உயிர்களையும், உடைமைகளையும், உணர்வுகளையும் சீண்டிப்பார்க்கின்ற ஒர் சூழல் ஏற்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அந்தவகையில் நடந்து முடிந்த இந்த சம்பவமானது இந்த நாடு சுதந்திரமான ஜனநாயக நாடு என்பதையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தநாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டது இந்த நாட்டு முஸ்லிம்களை ஒருமுறை ஆழமாக சிந்திக்கசெய்துள்ளது.

கௌரவ தவிசாளர் அவர்களே!

கடந்த பொசன் போயா தினமன்று முஸ்லிம் இளைஞர் குழாம் ஒன்றுடன் பௌத்த மத பிக்கு ஒருவர் மற்றும் அவரது வாகனச் சாரதி ஆகியோர் வாய்த்தக்கமொன்றில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் பொதுபல சேனாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டமொன்றில் ஊதி பெரிப்பிக்கப்பட்டு BBS அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரின் உரையினால் சிங்கள இனவாதிகள் மத்தியில் உசுப்பேற்றப்பட்டு அதனைத் தொடந்து  அமைப்பு முஸ்லிம் பிரதேசத்துக்குள் பேரணியாக சென்றதன் மூலம் கலவமாக மாறியது. அதனைத் தொடந்து நடந்த சம்பவங்களில் 5 முஸ்லிம்கள் மரணமடைந்தனர், 148 வீடுகளும், 83 கடைகளும், 17 பள்ளிவாயல்களும் உடைத்து நொருக்கப்பட்டு சூரையாடப்பட்டுள்ளன. 2250 முஸ்லிம்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். 300 கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
கௌரவ தவிசாளர் அவர்களே

மேற்படி சம்பவம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பின்வரும் கேள்விக் கணைகளை தொடுக்கின்றது.

1. இன வன்முறைகளுக்கு தூபமிடும் டீடீளு அமைப்பின் பொதுக் கூட்டத்திற்கும் பேரணிக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியதன் உள்நோக்கமென்ன?

2. சம்பவத்தின்போது அரச படையினரும் பொலிசாரும் சிங்கள இனவாதிகளுக்கு சாதகமாக செயற்பட்டதுடன் முஸ்லிம்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகளைக் கூட ஏற்றுக் கொள்ளாது விட்டதன் நோக்கமென்ன?

3. முஸ்லிம்கள் பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருகும் நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி முஸ்லிம் ஆண்கள் பள்ளிவாயலுக்குள் முடக்கப்பட்ட நேரம் முஸ்லிம் வீடுகள் தாக்கப்பட்டும் உடைக்கப்படும், கொள்ளையடிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டன. ஊரடங்குச் சட்ட நேர்ததில் இதனைச் செய்தது யார்? அப்போது பொலிசாரும் இரானுவதம்தினரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

4. எனவே ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓர் இன சுத்திகரிப்பு நடவடிக்கையில்லையா இது?

5. இவ்வன்முறைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை எந்தவொரு அரச ஊடகமும் வெளியிடவில்லையே இதுதானா ஊடகச் சுதந்திரம்

எனவே மேற்படி கனதிகலான கேள்விகளுடன் முஸ்லிம் உம்மா எனும் அடிப்படையில் பிரதேச, இயக்க மற்றும் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து முஸ்லிம் சமூகமும் ஒற்றுமைப்பட்ட வேண்டுமென இந்த சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுத்தவனாக பின்வரும் பிரேரணைகளை தீர்மானங்களாக நிறைவேறு;றமாறு இந்த உயர் சபையை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக வேண்டுகின்றேன்.

பிரேரணைகள் :
1. அண்மைக்காலமாக இனக்குரோத கருத்துக்களை தெரிவித்து இனங்களுக்கிடையிலான ஒன்றுமையை சீர்குலைத்து வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை அரசு உடனடியான கைதுசெய்ய வேண்டும்,

2. இலங்கையில் இனவாதத்தைத் தூண்டிவரும் பொதுபலசேனா மற்றும் ஏனைய இனவாதத்தை தூண்டும் அமைப்புகளை அரசு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தி உடனடியாக தடைசெய்ய வேண்டும்,

3. அரசாங்கம் இந்நாட்டு முஸ்லிம்களின் இருப்பையும், அவர்களின் மத உரிமைகள் மற்றும் மத ஸ்தாபனங்களின் பாதுகாப்பையும் முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும்,

4. மேற்படி வன்முறைகளுக்கு உடந்தையாகவும் ஆதரவாகவும் இருந்த பொலிசாரை, பொலிஸ் ஆணைக்குழு மூலம் விசாரணை செய்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்,

5. இனவாதத்தைத் தூண்டும் எந்தவொரு பொதுக் கூட்டத்திற்கோ பேரணிக்கோ அரசு அனுமதி வழங்கக் கூடாது,

6. மேற்படி வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின்; கட்டடங்கள் பொருட்கள் உடமைகளுக்கும் முழுமையான நட்டஈடு வழங்கப்பட வேண்டும்,

7. முஸ்லிம் சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களும் தமது வேறுபாடுகளை மறந்து ஓரணியில் ஒன்றுபட வேண்டும்,

8. இவ் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமும் தனித்தனியாக வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்,

9. முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இவ் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை சர்வதேச மயப்படுத்த சகல ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கோருதல்.

மேற்படி பிரேரனைகள் சபை உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Published by

Leave a comment