ரியோ டி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் நாளை ஆரம்பமாகின்றது. ஆரம்ப விழாவில் இடுப்புக்கு கீழே உறுப்புகள் செயல்படாத நபரை வைத்து போட்டித்தொடரை துவக்க பிபா முடிவு செய்துள்ளது. பிரேசிலை சேர்ந்த டாக்டர் மிக்குவேல் நிக்கோலெசிஸ் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குழு மூளை சென்சர் கருவியொன்றை கண்டுபிடித்துள்ளது.
இந்த கருவிக்கு ‘மூளை கட்டுப்பாட்டு ரோபோட்டிக் உடல்கூறு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிபா உலக கோப்பை நாளை இலங்கை நேரப்படி நள்ளிரவுக்குப் பின்னர் பிரேசிலின் சாவ்பவுலோ நகரில் துவங்குகிறது. அப்போது இடுப்புக்கு கீழே உறுப்புகள் செயல்படாத ஒரு இளைஞர் அல்லது ஒரு இளம் பெண்ணை வைத்து பந்தை உதைத்து ஆட்டத்தை ஆரம்பித்து வைக்க பிபா முடிவு செய்துள்ளது. அந்த நபர் குறித்து ரகசியம் காக்கப்படுகிறது.
மூளை கட்டுப்பாட்டு சென்சரை அணிந்த அந்த நபர் நினைப்பதை உடல் செய்யும். இதற்காக இடுப்புக்கு கீழே உடல் உறுப்பு செயல்படாத அதே நேரம் உணர்ச்சிகள் இருக்கும் ஒரு நபரை தேடி கண்டுபிடித்து கடந்த ஒரு வாரமாக பிரேசிலில் பயிற்சி அளித்து வருகிறார்கள் நிபுணர்கள்.
நாளை இரவு பிரேசிலும்-குரோஷியாவும் மோதும் பந்தையத்திற்கு முன்பாகத்தான் அந்த நபரை அறிமுகம் செய்வார்கள்.இதுகுறித்து ஆய்வுக்குழு டாக்டர்கள் கூறுகையில்,
அறிவியலால் எந்த மாதிரி சாதனைகள் செய்ய முடியும் எந்பபதை உலக மக்களுக்கு வெளிக்காட்ட உலக கோப்பையை நாங்கள் பயன்படுத்துகிறோம் என்றார். இதனிடையே துவக்க போட்டி நடைபெறும் சாவ்பவுலோ நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்புக்காக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Published by

Leave a comment