கொழும்பு: கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பாக பல்வேறுபட்ட வதந்திகளும் செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில முக்கியமான தீர்மானங்களை எடுத்துள்ளது.
முதலமைச்சர் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை ஸ்ரீலங்கா மு.காங்கிரஸ் நடாத்தியும் கட்சி உறுப்பினர்களிடையே அதிக போட்டி நிலவுவதால் இவை அனைத்தும் சமரசமின்றியே நிறைவுற்றுள்ளன. மு.கா அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் முதலமைச்சர் பதவியை இரண்டரை வருடங்களின் பின்னர் அவர்களுக்கு வழங்குவதாயின், ஸ்ரீ.ல.மு.கா வசமுள்ள இரண்டு மாகாண அமைச்சுக்களையும் மீள ஒப்படைக்க வேண்டும்.
எனவேதான் கட்சியின் எதிர்கால நலன்களை கருத்திற் கொண்டும், முதலமைச்சர் பதவி தொடர்பாக கட்சிக்குள் விட்டுக் கொடுப்பின்மையால் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்கும் முகமாகவும் ஸ்ரீ.ல.மு.கா உயர்மட்டம் கூடி சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது.
ஸ்ரீ.ல.மு.கா இற்கு முதலமைச்சர் தேவையில்லை என்றும் அதற்கு பரிகாரமாக ஏற்கனவே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் கல்முனை கரையோர தனி மாவட்டத்தை கோருவோம் என்றும் மத்திய அரசில் இரண்டு பிரதியமைச்சுக்களை கோருவோம் என்றும் ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் உயர்மட்டம் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அமீர் அலிக்கு வழங்கினால் அது கிழக்கு மாகாணத்தில் அ.இ.ம.காங்கிரசை வளர்க்கும் ஒரு செயலாக மாறிவிடும் என்பதால் அமீர் அலிக்கு வழங்குவதற்கும் இணக்கம் தெரிவிக்காமல் தொடர்ந்தும் நஜீப் அப்துல் மஜீதையே முதலமைச்சராக வைப்பதற்கு இணக்கம் தெரிவிப்போம் என்றும் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் உயர்மட்டக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Published by
![slmc[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/slmc1.jpg?w=150&h=112)
Leave a comment