http://www.slbf.com ஊடாக எவரேனும் பணம் செலுத்தியிருப்பின் உடன் முறைப்பாடு செய்யவும்
கொழும்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தைப் போன்று போலியான இணையத்தளம் ஒன்றை தயாரித்து அதனூடாக தென்கொரியாவுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி ஒருகோடியே 60 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த கணவன்,
மனைவி மற்றும் இணையத்தளத்தை தயாரித்த நபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன நேற்றுத் தெரிவித்தார்.
இவர்களுடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டு வந்த பெண் தற்போது இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை (இன்டர்போல்) நாடியுள்ளதாகவும் இவரை கைது செய்ய ரெட் அலெட் (Red Alert) அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிங்கள இளைஞரான இவர் முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் முடித்து வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் நடவடிக்கைகளை தெஹிவளை பிரதேசத்தில் செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இரத்மலானை பகுதியில் இணையத்தளம் வடிவமைக்கும் ஒருவரிடம் சுமார் 50ஆயிரம் ரூபாய் கொடுத்து http://www.slbf.com என்ற பெயரில் இணையத்தளத்தை வடிவமைத்துள்ளனர். இந்த இணையத்தளத்தின் ஊடாக தென்கொரியா வில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக விளம்பரங்களை செய்து, வேலைவாய்ப்பை பெற வேண்டுமென்றால் குறிப்பிட்ட கணக்கிற்கு பணத்தை வைப்பிலிட வேண்டுமென்றும் இணையத்தளத்தில் அறிவித்துள்ளனர்.
பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ரசீதைப் பெற்றுக் கொடுப்பதுடன் தென்கொரியாவுக்கு வேலைவாய்ப்பிற்கு செல்வதற்காக தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ஒன்றையும் இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதங்கள் இவர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வெளிவிவகார அமைச்சரின் இணைப்புச் செயலாளராக தான் செயற்படுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. சந்தேக நபரான கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 60இலட்சத்து 95ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவி புரிந்த பெண் ஒரு கோடி ரூபா பணத்துடன் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளார்.
மோசடி செய்து பணத்துடன் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ள மேற்படி பெண்ணை கைது செய்யவே சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களால் வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளத்தை தடை செய்யவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்பு பட்டவர்களா என்பது தொடர்பாகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
http://www.slbf.com என்ற இணையத் தளம் ஊடாக தென்கொரியாவுக்கு வேலைவாய்ப்புக்கு செல்வதற்காக எவரேனும் பணம் வைப்பீடு செய்திருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யுமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொள்கிறது. பொலிஸ் தலைமையகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
– தினகரன்
இவ்வாறான போலி முகவர்கள் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா வேலை வாய்ப்புக்களிலும் காணப்படுகின்றனர். வாசகர்கள் அவதானமாக இருக்கவும்.
Published by
![internet_fraud[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/internet_fraud1.jpg?w=150&h=112)
Leave a comment