பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
காத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள தௌஹீத் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் கௌரவ பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ் (MA,MP அவர்களுக்குமிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று கடந்த 25.05.2014ம் திகதி காத்தான்குடி நகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது காத்தான்குடி தௌஹீத் உலமாக்களுடன் இணைந்து இஸ்லாமிக் சென்டர், குபா ஜும்ஆ பள்ளிவாயல், லஜ்னதுஸ் ஸுன்னா அந்நபவிய்யா, தாருல் அதர் அத்தஅவிய்யா, தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் பாலமுனை இஸ்லாமிய வழிகாட்டல் மையம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், அமைச்சர் அவர்களின் சார்பில் கௌரவ மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எப்.எம். ஷிப்லி அவர்களும் கௌரவ நகர முதல்வர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். அஸ்பர் (JP) மற்றும் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி (BA) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் அத்வைதம் போன்ற அகீதாவுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் இணைவைத்தல் போன்ற அம்சங்களுக்கு எதிரான பிரச்சாரங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதிலும், இதனால் ஏற்படும் தடைகளை எதிர்கொள்வதிலும் அனைத்து தஃவா அமைப்புக்களும் ஒருமித்து செயற்பட்டு வருவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், எமது பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும், எமக்கெதிராக அவ்வப்போது ஏற்படுத்தப்படும் தடைகளை முறியடிப்பதிலும் இப்பிரதேசத்தின் செல்வாக்குமிக்க அரசியல்வாதி என்ற வகையில், அமைச்சர் அவர்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன் ‘அகீதாவுக்கு எதிரான கொள்கையுடன் சம்பந்தப்பட்ட அம்சங்களுக்கு புத்துயிர் அளித்து வலுவூட்டல்இ மீண்டும் இம்மண்ணில் உயிர்பெறச் செய்தல் மற்றும் சட்டரீதியான அங்கீகாரங்களை பெற்றுக் கொடுத்தல்’ போன்ற விடயங்களில் நேரடியாக அல்லது மறைமுகமாக செயற்படும் அரசியல்வாதிகள் குறித்த எமது பார்வையும்இ அவதானமும் எதிர்காலத்தில் தெளிவானதாக அமையும் எனவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மிகவும் ஆரோக்கியமான கருத்துக்கள் பரிமாறப்பட்ட இச்சந்திப்பில் ‘தஃவா’ அமைப்புக்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து தாம் திருப்தி அடைவதாகவும், அரசியல்வாதிகளுக்கும், தஃவா அமைப்புக்களுக்கும் இடையிலான இடைவெளி நீக்கப்படல் வேண்டுமெனவும், இவ்வாறான கலந்துரையாடல்கள் சமூக ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக அமையுமெனவும் கௌரவ அமைச்சர் அவர்களால் கருத்துரைக்கப்பட்டது.
அத்துடன் குறித்த சந்திப்பு தொடர்பில் உள்ளளூர் ஊடகங்களில் வெளிவந்துள்ள சில விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என பொறுப்புடன் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவதுடன் தனிநபர்கள் மற்றும் குழுக்கிடையில் சந்தேகங்களையும் விரிசல்களையும் ஏற்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகளை எமது அனுமதியின்றி எவரும் வெளியிட வேண்டாமென வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.
‘அல்லாஹ் நம் எல்லோரையும் உண்மையான மார்க்கத்தில் நிலைபெறச் செய்வானாக!’



Leave a comment