திருவனந்தபுரம்: காலில் காயமடைந்த சிறுவனுக்கு நடந்த சத்திரசிகிச்சையின்போது , காலுக்குப் பதில் அவனது ஆணுறுப்பில் சத்திரசிகிச்சை செய்து விட்டார் ஒரு கேரள டாக்டர். கேரள மாநிலம் மூவட்டுப்புழா தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் இந்த தவறு நடந்து விட்டது.
இது தொடர்பாக ஒரு டாக்டர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள மருத்துவமனைக்கு 6 வயது சிறுவனை அவனது பெற்றோர் அழைத்து வந்தனர். காலில் ஏற்பட்ட தசை வளர்ச்சி காரணமாக அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சையை டாக்டர் தசின் ரசின் என்பவர் செய்தார்.
அறுவைச் சிகிச்சை முடிந்து வெளியே வந்த டாக்டர், அங்கிருந்த சிறுவனின் பெற்றோரிடம், உங்களது பையனின் ஆண் குறியில் ஏற்பட்ட பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். காலில்தானே பிரச்சினை என்று டாக்டரிடம் கூறிய அவர்கள் நடந்ததைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாவட்ட மருத்துவ அதிகாரிக்குப் புகார் பறந்தது.
இதுகுறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஹசீனா முகம்மது விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் டாக்டர் தவறாக அறுவைச் சிகிச்சை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தற்போது டாக்டர் தசின் ரசின் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Published by

Leave a comment