கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தின் செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 மாயானது. பின்னர் அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.
இதையடுத்து இந்திய பெருங்கடலில் மாதக்கணக்கில் தேடும் பணி நடந்து வருகிறபோதிலும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.இந்நிலையில் மாயமான விமானத்தின் பாதையை கண்டுபிடிக்க உதவிய இங்கிலாந்தை சேர்ந்த இன்மார்சாட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
விமானத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கு வந்த சிக்னல்களை வைத்து மலேசிய விமானம் தெற்கு இந்திய கடல்பகுதியில் விழுந்தது என்பதை கூறியதே இந்த இன்மார்சாட் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. விமானம் கடலுக்குள் விழுந்தது என்பதை தீர்மானிக்க உதவிய செயற்கைக்கோள் தகவல்களை வெளியிட மலேசியா முதலில் தயங்கியது.
இதையடுத்து அந்த தகவல்களை வெளியிடுமாறு விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.அதன் பிறகே செயற்கைக்கோள் தகவல்களை மலேசியா இன்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment