சோமா: ஒன்றாக பிறந்து, ஒன்றாகவே மணவாழ்க்கைக்குள் நுழைந்து ஒன்றாகவே மரணத்தையும் தழுவியிருக்கிறார்கள் துருக்கியில் வாழ்ந்த ஒரு இரட்டைச் சகோதரர்கள். இவர்களின் மரணத்தால் அவர்களது குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
கடந்த வாரத்தில் துருக்கியின் வடக்கு பகுதியின் சோமா நகரில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுரக்கத்தின் உள்ளே பணியில் இருந்த சுமார் 301 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை சுரங்கத்தினுள் இருந்து மீட்ட மீட்புப் படையினர், உடல் கருகிய நிலையில் கைகோர்த்தபடி உயிரை விட்ட இரட்டைப் பிறவிகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இரட்டை சகோதர்கள்:
சோமா நகரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பயாட் என்ற கிராமத்தை சேர்ந்த 32 வயது இரட்டை சகோதரர்கள் இஸ்மாயில் மற்றும் சுலைமான். ஒரே நேரத்தில் கல்யாணம்…தாயின் கருவறைக்குள் ஒரே நேரத்தில் உருவான இவர்கள் ஒன்றாகவே வளர்ந்து, படித்து, பெரியவர்களாயினர். ஒரே மேடையில் இவர்களது திருமணமும் நடந்தது.
வேலைக்கு சேர்ந்ததும் ஒன்றாகவே:
விபத்துக்குள்ளான நிலக்கரி சுரங்கத்தில் சகோதர்கள் இருவரும் ஒன்றாக இணைந்தே பணியில் சேர்ந்தனர். இஸ்மாயிலின் மனைவி பாத்திமாவுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு தற்போது இரண்டு வயதாகிறது. சுலைமானின் மனைவிக்கு மூன்று வயதில் ஒரேயொரு மகன் மட்டும் உள்ளார்.
மரணமும் பிரிக்கவில்லை:
துரதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் சிக்கிய சகோதர்கள் உயிர் பிரியும் நேரத்திலும் கூட ஒருவரை ஒருவர் பிரிய மனதில்லாமல், ஒருவர் கையை மற்றவர் கோர்த்தபடி .மரணித்துள்ளனர்.
தந்தை வேதனை:
தனது மகன்கள் அற்ப ஆயுளில் பூமியை விட்டு பிரிந்துச் சென்ற வேதனையை தாங்கிக் கொள்ள முடியாத தந்தை, ‘ஒரே பிரசவத்தில் அவர்கள் பிறந்த அந்த நாளும், ஒன்றாக பள்ளிக்கு சென்ற முதல் நாளும் என் கண்களில் இருந்து மறையவே இல்லை. அதற்குள் அவர்கள் இருவரையுமே நாங்கள் இழந்து விட்டோம்..’ என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மனைவியின் கதறல்:
இது தொடர்பாக சுலைமானின் மனைவி முர்சிட் கூறும்போது, ‘எனது கணவர் பொறுப்புள்ள ஒரு குடும்பத் தலைவராக இருந்தார். தனது குடும்பத்தை அவர் மிகவும் நேசித்தார். பாதுகாப்பற்ற, சிக்கலான தொழில் சூழலிலும் அவர் கடுமையாக உழைத்தார். சிறிது காலம் வேலை செய்துவிட்டு, பின்னர் ராஜினாமா செய்து, குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட அவர் திட்டமிட்டிருந்தார். அவரது ஆசை நிறைவேறாமல் போய்விட்டதே..’ என்றார்.
Published by


![Turkey-mine-disaster[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/05/turkey-mine-disaster2.jpg?w=780&h=519)
Leave a comment