காத்தான்குடி: 1979ம் ஆண்டிலிருந்து அத்வைதக் கொள்கையை காத்தான்குடியில் போதித்துவரும் மௌலவி அப்துல் ரஊபின் கருத்துக்களை, அவர் பேசிய ஒலி, ஒளி வடிவங்களை ஆதாரங்களாக வைத்து, இவ்வாறான அத்வைதக் கருத்துக்கள் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணானவை என்பதை மௌலவி ஸஹ்ரான் நிரூபித்து வருகின்றார்.
காத்தான்குடி, தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பள்ளிவாயலில் இடம்பெற்றிருந்த குறித்த சர்ச்சைக்குரிய 13 அமர்வுகளில், 12 டி.வி.டிக்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றன.
இதனடிப்படையில், பகிரங்க விவாதத்திற்கு வருமாறு மௌலவி அப்துர் ரஊப் அவர்களை மௌலவி ஸஹ்ரானும், தாருல் அதர் அமைப்பும் அழைத்திருந்தன.
இந்நிலையில், அத்வைதத்தைப் பின்பற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர்களும், அத்வைதத்துக்கு எதிரான காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர்களும் முகநூலில் போலியான கணக்கை ஆரம்பித்து இக்கருத்துக்கள் சம்பந்தமாக மோதிவருகின்றனர்.
இவ்வாறான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுவதுடன், கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகத்தையும் உபயோகித்து வருவதுடன், ஆபாசப் படங்களையும் தங்களது இடுகைகளாக அமைத்து வருகின்றனர்.
என்ன இருப்பினும், இவ்வாறான முகநூல் சண்டைகள் காத்தான்குடியில் தற்பொழுது சர்ச்சைக்குரிய பிரச்சினையைத் தீர்க்கப்போவதில்லை.
எனவே, தயவு செய்து எமது ஊர் சகோதரர்கள் நாகரிகமான முறையில் முகநூலில் குறித்த விடயம் சம்பந்தமாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
Published by

Leave a comment